இமயமலையில் இருக்கேன்.. உயிரோடு இருக்க வேண்டும்.. அதைதான் காளி விரும்புகிறார்.. நித்தியானந்தா வீடியோ
தான் இமயமலையில் இருப்பதாக நித்யானந்தா வீடியோவில் தெரிவித்துள்ளார்
Recommended Video
பெங்களூரு: "நான் இப்போது இமயமலையில் இருக்கிறேன். மிகப்பெரிய ஆன்மீக செயலை செய்து முடிப்பதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும். பரமசிவனும், கால பைரவரும், மகா காளியும் அதை விரும்புகிறார்கள்" என்று நித்யானந்தா வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதபாத்தில் உள்ள ஆசிரமத்துக்கு நன்கொடை திரட்டுவதற்காக, 4 குழந்தைகளை கடத்தி, சட்டவிரோதமாக ஒரு அபார்ட்மென்ட்டில் அடைத்து வைத்திருந்ததாக நித்யானந்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக 2 நிர்வாகிகளம் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
நித்யானந்தாவை இது சம்பந்தமாக விசாரிக்க முற்பட்டபோது, அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி, தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் வெளிநாட்டுக்கு தப்பி சென்றாலும், உரிய வழிய நித்யானந்தாவை கைதுசெய்வோம் என்று குஜராத் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தன்னிலை விளக்கம்
இந்த நிலையில், ஆன்லைனில் தோன்றி, நித்யானந்தாவே தன்னிலை விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லும்போது, "என்னுடைய எல்லா குருகுலமும் எல்லா நேரமும் திறந்தே இருக்கும். ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். அவ்வளவு ஏன்? பல பெற்றோர் எனது ஆசிரமத்திலேயே தங்கியிருக்கிறார்கள்.

கால பைரவர்
இந்தியாவில் நீதியைப் பெற நீண்ட காலமாகும். நிறைய பணம் செலவாகும். இப்போது கைது செய்யப்பட்டுள்ள என் குழந்தைகளை கால பைரவர் காப்பாற்றுவார். என்மீது பாய வந்த அம்பை இடையில் நுழைந்து அந்த இரு பெண்களும் தங்கள்மீது தாங்கிக்கொண்டுள்ளனர். பொய் வழக்குக்காக கைது செய்யப்பட்டுள்ள அவர்கள், நிறைய சித்ரவதைகளை அனுபவித்துவருகின்றனர். திட்டம்போட்டு என்மீது குற்றம் சுமத்தப்படுகிறது. என்ன நடந்தாலும் என் ஆன்மிகப் பணி தொடர்ந்துகொண்டே இருக்கும். நான் யாருக்கும் எதிரி அல்ல. நான் யாருக்கும் எதிரி அல்ல. இந்து மதத்தை வெறுப்பவர்களும், நாட்டை வெறுப்பவர்களும் எனக்கு எதிராக மிகப்பெரிய சதியில் இறங்கி உள்ளனர்.

காணி நிலம்
இதுபோன்ற தொடர்ச்சியான துன்புறுத்தல்கள், நெருக்கடிகள் இனி எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க உலகில் எங்காவது ஒரு மூலையில் காணி நிலம் எனக்கு அளிக்க வேண்டும். அந்த இடத்தில் நானும், என்னுடைய சீடர்களும் வேத ஆகம ரீதியிலான ஆன்மீக பயிற்சியில் அமைதியாக ஈடுபடுவோம்.
|
துன்புறுத்தல்கள் இல்லை
நான் மனித உரிமைகளுக்கும், குழந்தைகள் நல உரிமைகளுக்கும் எதிரானவனும் அல்ல. எனது குருகுலத்தில் அகிம்சை வழியிலான பயிற்சிகள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. அங்கு எந்தவித துன்புறுத்தல்களும் நிகழவில்லை. நான் இப்போது இமயமலையில் இருக்கிறேன். மிகப்பெரிய ஆன்மீக செயலை செய்து முடிப்பதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும்.

மகா காளி
பரமசிவனும், கால பைரவரும், மகா காளியும் அதைதான் விரும்புகிறார்கள். தினமும் காலையில் சத்சங்கம் மூலம் உலகம் முழுவதும் உள்ள எனது சீடர்களை தொடர்பு கொள்கிறேன். அதை தவிர என் சீடர்களுக்கு எந்தவித தனிப்பட்ட ஆலோசனைகளை நான் வழங்குவதே கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications