சித்தராமையா Vs சிவக்குமார் – கர்நாடகா அரசியலில் வெடிக்கும் நவம்பர் புரட்சி
பெங்களூர்: கர்நாடகா அரசும், காங்கிரஸ் கட்சியும் நவம்பர் மாத புரட்சிக்கு தயாராகி வருகிறது. 2023 சட்டமன்ற தேர்தல் ஒப்பந்தப்படி 5 வருட ஆட்சியை இரண்டாக பிரித்து, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறியிருந்தனர். அந்த காலகட்டம் வந்துவிட்டதால் முதலமைச்சர் சித்தராமையா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பெங்களூர் தொடங்கி டெல்லி வரை நகர்த்தும் அரசியல் நடவடிக்கைளால் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
ஒட்டு மொத்த நாடும் பீகார் சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் கர்நாடகா காங்கிரஸில் நவம்பர் புரட்சி பூகம்பத்தை கிளப்ப தொடங்கியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2023 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சித்தராமையா, டி.கே சிவக்குமார் என்று பலர் முதலமைச்சர் பதவிக்கு முட்டி மோதினார்கள். கடைசியில் சித்தராமையாக்கு முதலமைச்சர் பதவி சென்றது.

நவம்பர் புரட்சி
ஆனாலும் கட்சி அதற்கு சில ஒப்பந்தங்களையும் போட்டது. இந்த முடிவு 2.5 ஆண்டுகளுக்கு தான் செல்லும். அதுவரை சிவக்குமார் கர்நாடகா துணை முதலமைச்சராகவும், கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் தொடர்வார் என்று கூறினார். காங்கிரஸ் தேசிய தலைமை சொன்ன அந்த 2.5 வருடங்கள் முடிந்துவிட்டது. வருகிற நவம்பர் மாதத்துடன் காங்கிரஸ் ஆட்சி 2.5 வருடங்களை நிறைவு செய்யவுள்ளது.
அதனால் கர்நாடகா காங்கிரஸில் ஏற்பட போகும் மாற்றம் என்ன, சித்தராமையா மாற்றப்பட்டு சிவக்குமார் முதலமைச்சராக நியமிக்கப்படுவாரா என்று தகவல்கள் பரபரக்க தொடங்கியுள்ளன. விரைவில் ராகுல் காந்தியும் கர்நாடகா விசிட் அடிக்கவுள்ளார். இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சில மாநிலங்களில் கர்நாடகா ஒன்று. அதனால் கர்நாடகா அரசியல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சித்தராமையா பலே
இதுகுறித்து கர்நாடகா காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், "முதலமைச்சர் சித்தராமையா எப்படியாவது 5 வருடங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் தன் பதவியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். சித்தராமையா தனக்கு நெருக்கமாக உள்ள அமைச்சரவை சகாக்களுடன் வருகிற நவம்பர் 7 ஆம் தேதி இரவு விருந்து சாப்பிட்டு ஆலோசனை நடத்தவுள்ளார். அமைச்சர் ராஜன்னா மூலம் சிறுபான்மை, தலித், பிற்படுத்தப்பட்ட அமைச்சர்கள் அனைவரையும் வழிக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்.
அதனுடன் நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு பிறகு சித்தராமையா டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு அவர் 2-3 நாட்கள் தங்கி முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். சிவக்குமாரும் களத்தில் வேகம் காட்டுகிறார். அவர் வருகிற நவம்பர் 10 ஆம் தேதி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் 100 காங்கிரஸ் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. அதைத் திறந்து வைக்க ராகுலை அழைக்கவுள்ளார்.
சிவக்குமார் ஸ்கெட்ச்
இதன் மூலம் ராகுல் மற்றும் மேலிடத்தில் ஸ்கோர் செய்து, தன்னுடையை காரியங்களையும் சாதிக்க நினைக்கிறார். 2023 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி அமைச்சரவையில் மாற்றம் செய்து உரிய மாற்றம் செய்து தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிவக்குமாரும், அவரின் ஆதரவாளர்களும் உறுதியாக உள்ளனர். முதலமைச்சர் நாற்காலியில் அமர சிவக்குமார் தீவிரம் காட்டுகிறார்.
மறுபக்கம் சித்தராமையா காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கி செக் வைக்க நினைக்கிறார். இதனால் நவம்பர் மாத கர்நாடகா அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. "என்றனர். இந்நிலையில், "யார் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று வதந்திகளையும், தங்களின் ஊகங்களையும் பரப்ப வேண்டாம் ."என்று காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications