பெரிதாகும் மோதல்! ஹிஜாப்பிற்கு எதிர்ப்பு.."காவி ஷால்" போட்டு.. ரோட்டில் இறங்கிய இந்துத்துவா மாணவிகள்
பெங்களூர்: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவிகள் காவி ஷால் அணிந்து வகுப்பிற்கு வந்துள்ளனர்.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பியூ கல்லூரிக்கு வர பல மாவட்டங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மாணவிகள் ஹிஜாப் அணியாமல் வர வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஹிஜாப் எங்க உரிமை.. அவங்களை விடலைனா நாங்க வரமாட்டோம் -மாணவிகளுக்கு ஆதரவாக குதித்த இஸ்லாமிய மாணவர்கள்
உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், சிவமொக்கா போன்ற மாவட்டங்களில் இந்த போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் இஸ்லாமிய மாணவிகள் பலரை வகுப்பிற்குள் அனுமதிக்காமல் பியூ கல்லூரிகள் வெளியே நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 4 நாட்களாக குந்தபுரா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய மாணவிகள் இதனால் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம்
இந்த நிலையில் குந்தபுராவில் மேலும் பல பியூ கல்லூரிகளில் ஹிஜாப் தடை தொடர ஆரம்பித்து உள்ளது. அரசு பியூ கல்லூரிகள், அரசு உதவி பெறும் பியூ கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என்று பல கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு இஸ்லாமிய மாணவிகள் அளித்த பேட்டியில், எங்கள் மதம் குறிப்பிட்டதை மட்டுமே நாங்கள் செய்கிறோம். எங்கள் மதத்தை பின்பற்ற எங்களுக்கு உரிமை உள்ளது.
இஸ்லாமிய மாணவிகள்
இத்தனை நாட்களாக நாங்கள் ஹிஜாப் அணிந்து வந்த போது வகுப்பில் யாருக்கும் பிரச்சனை இல்லை. இப்போது திடீரென இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் எங்களுக்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்லூரி விதி புத்தகத்தில் ஹிஜாப் அணி அனுமதி என்றே உள்ளது. இவ்வளவு நாள் அனுமதித்துவிட்டு எக்ஸாம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் எங்களுக்கு தடை விதித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இஸ்லாமிய மாணவிகள் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஜாப்
இங்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவி துண்டு போட்டுகொண்டு மாணவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் தெரிவித்த கருத்தில், உங்கள் மதம் முக்கியம் என்றால் அதை வீட்டில் செய்யுங்கள். மதராஸாவில் செய்யுங்கள். பள்ளியில் செய்ய கூடாது. நீங்கள் பள்ளி யுனிபார்மில்தான் வர வேண்டும். இல்லையென்றால் எங்கள் இந்து மதத்தின் "கேசரி" (காவி) துண்டை அணிந்து நாங்கள் வகுப்பிற்கு வருவோம். உங்களால் அதை தடுக்க முடியாது என்று இந்து மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
காவி துண்டு
இதில் புதிய திருப்பமாக இந்து மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இத்தனை நாள் அருகில் இருந்து படித்த இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இந்து மாணவிகள் களமிறங்காமல், அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி காவி நிறத்தில் ஷால் அணிந்து இன்று இந்து மாணவிகள் தங்கள் வகுப்புகளுக்கு வந்தனர். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது தவறு.
Recommended Video
காவி ஷால்
நாங்கள் இந்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்பிற்குள் அனுமதிக்க கூடாது. இல்லையென்றால் நாங்களும் இப்படி காவி ஷால் அணிந்து வகுப்பிற்கு வருவோம் என்று இந்து மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்து மாணவிகள் இப்படி காவி ஷால் அணிந்து வகுப்பிற்கு வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் காவி ஷால் அணிந்து ஊர்வலம் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.