ஒரு இட்லி ரூ.35.. தோசை, டீ – காபியின் விலையும் கிடுகிடு உயர்வு.. பெங்களூரில் இன்று முதல் அமல்
பெங்களூர்: வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வால் பெங்களூர் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளில் இட்லி, தோசை, டீ, காபியின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. தோசைக்கு ரூ.10 வரையும், டீ, காபி, இட்லிக்கு ரூ.5 வரையும் விலை அதிகரித்துள்ளது. இதனால் பிரபலமான ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளில் ஒரு இட்லி ரூ.35க்கு விற்பனையாகிறது.
மே 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்தது. சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.993 வரை விலை உயர்த்தப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கிடுகிடுவென உச்சம் தொட்டுள்ளது. ஏற்கனவே சிலிண்டருக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் இந்த விலையேற்றத்தால் ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வணிக பயன்பாட்டு சிலிண்டர் டெல்லியில் ரூ.3,071.50 க்கு விற்பனையாகிறது. மும்பையில் ரூ.3,024க்கும், பெங்களூரில் ரூ.3,154க்கும், சென்னையில் ரூ.3,237 க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வை சமாளிக்க ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகளில் உணவு பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளன.
மசாலா தோசை - இட்லி விலை உயர்வு
இதற்கு பெங்களூருவும் தப்பவில்லை. பெங்களூரில் இன்று முதல் பல பிரபலமான ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளில் உணவு பொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி மசாலா தோசையின் விலை ரூ.8 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதிய உணவின் விலை ரூ.10 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இட்லியின் விலையும் ரூ.5 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் அசோகா பில்லர் அருகே உள்ள சிவாலி ஹோட்டலில் இட்லி ரூ.30ல் இருந்து ரூ.35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேனேஜர்கள் சொல்வது என்ன?
உத்தரஹள்ளியில் உள்ள ரெஸ்டாரண்ட் மேலாளர் ஸ்ரீராம் சுகுமார் கூறுகையில், ''நாங்கள் உணவுகளின் விலையை இன்று முதல் உயர்த்தி உள்ளோம். மசாலா தோசை விலை ரூ.8 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார அடுப்பு பயன்படுத்துவதால் காபி, டீ விலையை உயர்த்தவில்லை. மதிய உணவின் விலையை ரூ.10 வரை அதிகரித்துள்ளோம்'' என்றார்.
பத்மநாபநகரில் உள்ள பிரபல ரெஸ்டாரண்ட் மேனேஜர் நவீன் குமார் கூறுகையில், ''எங்களின் ரெஸ்டாரண்ட்டுக்கு தோசைக்காக மக்கள் வருகின்றனர். சமீபத்தில் தான் ரூ.70 விற்கப்பட்ட தோசையின் விலையை ரூ.80 ஆக்கினோம். இப்போது நாங்கள் தற்போது தோசை விலையை உயர்த்தவில்லை. ஆனால் தோசை விற்பனையாகும் நேரத்தை குறைத்துள்ளோம்'' என்றார்.
டீ - காபி விலை அதிகரிப்பு
மேலும் பல பிரபலமான ரெஸ்டாரண்ட்டுகளில் டீ, காபியின் விலையும் கிடுகிடுவென அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது விலை உயர்த்தப்பட்டது. அப்போது டீ, காபியின் விலை ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது சிலிண்டர் விலை உயர்வு டீ, காபியின் விலை ரூ.25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விலை உயர்வு ஒவ்வொரு ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
பிஜிக்களில் வாடகை அதிகரிக்க திட்டம்
அதேபோல் பெங்களூரில் பிஜிக்களின் மாத வாடகையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வாடகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பெங்களூர் பிஜி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அருண் உறுதி செய்துள்ளார். இந்த மாதத்தில் இருந்து பிஜிக்களில் வாடகையை அதிகரிக்கும் திட்டம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications