லோக்சபா தேர்தல்: பாஜக கூட்டணியில் கர்நாடகா மாஜி முதல்வர் குமாரசாமி போட்டி? தொகுதி ரெடி - பின்னணி
பெங்களூர்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிட உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தொகுதி ரெடியாக இருக்கும் நிலையில் குமாரசாமியின் இந்த முடிவின் பின்னணி குறித்த முக்கிய விபரம் வருமாறு:
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து சித்தராமைா முதல்வரானார். துணை முதல்வராக கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியான லிங்காயத் சமுதாயத்தினரின் ஓட்டுகளையும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டு வங்கியான ஒக்கலிகர் சமுதாய மக்களின் ஓட்டுகளையும் காங்கிரஸ் கட்சி அதிகம் பெற்றது. இதுதான் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிக்கு பலத்த அடியாக கர்நாடகாவில் மாறிப்போனது.
இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதுதொடர்பாக முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா, அவரது மகனும், ஜேடிஎஸ் மாநில தலைவரான குமாரசாமியும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
கர்நாடகாவில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 4 தொகுதிகளை பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் கட்சி கேட்டுள்ளது. அதன்படி ஹாசன், மண்டியா, பெங்களூர் புறநகர், சிக்பள்ளாப்பூர், துமகூரு உள்ளிட்ட தொகுதிகளில் 4 இடங்களில் ஜேடிஎஸ் கட்சி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகளில் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளதால் இந்த தொகுதிகளை ஜேடிஎஸ் கட்சி குறிவைத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அவர் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக தலைவர்கள் குமாரசாமியிடம் வலியுறுத்தி உள்ளனர்.
அதன்படி பார்த்தால் குமாரசாமி மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இந்த தொகுதியில் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். அதோடு இதற்கு முன்பு சிஎஸ் புட்டராஜூ என்பவர் இந்த தொகுதியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் குமாரசாமி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா போட்டியிட்டார். இவர் சுயேச்சை வேட்பாளரான மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதாவிடம் தோல்வியடைந்தார். அதன்பிறகு கடந்த சட்டசபை தேர்தலிலும் மண்டியா நாடாளுமன்றத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சி பின்னடைவை சந்தித்தது. இதனால் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால் மீண்டும் அதனை ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக மாற்றலாம் என குமாரசாமி தரப்பினர் நினைக்கின்றனர்.
இதுமட்டுமின்றி கர்நாடகா சட்டசபைக்கு இனி 4 ஆண்டுகள் கழித்து தான் தேர்தல் நடக்கும். அதோடு வரும் தேர்தலில் மத்தியில் மீண்டும் பாஜகவின் ஆட்சி அமைந்தால் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் கட்சியையும், மாநிலத்தில் செல்வாக்கையும் உயர்த்தலாம். இதன்மூலம் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கலாம் என ஜேடிஎஸ் கட்சியின் நினைக்கின்றனர். இதனை குமாரசாமியும் புரிந்து வைத்துள்ளார். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமி மண்டியா தொகுதியில் இருந்து போட்டியிட அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications