விஷப் பாம்பு போன்றவர் மோடி.. நக்கினால் சாவுதான்! கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் கார்கே கடும் ஆவேசம்
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி விஷப்பாம்பை போன்றவர் என்றும், விஷப்பாம்பு நக்கியவர்கள் இறந்துவிடுவார்கள் எனவும் கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு உரையாற்றினார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி மீதும், பாஜக அரசு மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.

அவர் ஆற்றிய உரையில், "பிரதமர் நரேந்திர மோடி விஷப் பாம்பை போன்றவர். அது பொதுமக்களை நக்கினால் அவர்கள் இறந்துவிடுவார்கள்." என்று கூறினார். மல்லிகார்ஜுன கார்கேயின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கேவிடம் அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் தனது பேச்சு குறித்து விளக்கம் கொடுத்து உள்ளார்.
அதில், "நான் பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் குறிப்பிட்டு அப்படி சொல்லவில்லை. எனது கருத்து மொத்த பாஜகவுக்கு பொருந்தும். பாஜகவின் கொள்கை என்பது விஷப் பாம்பை போன்றது என்றே நான் சொல்ல வந்தேன். அந்த கொள்கையை தொட முயன்றால் மரணம் நிச்சயம்." என்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வருகிறது.
வரும் மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
மறுபக்கம் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரங்கள் கர்நாடகாவில் சூடுபிடித்து இருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களும் அதில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் அம்மாநில தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
"கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் வெடிக்கும்" என்று அமித்ஷா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக புகாரளிக்கவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் கட்சியின் வாரண்டி முடிவடைந்துவிட்டது என்று பேசியதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு பரபரப்பை பற்ற வைத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications