ரவுடிக்கு ‛வணக்கம்’ சொன்ன பிரதமர் மோடி? போட்டோ வெளியிட்டு சாடிய காங்கிரஸ்.. கர்நாடகாவில் சர்ச்சை
பெங்களூர் - மைசூரு இடையேயான 10 வழிச்சாலையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பெங்களூர்: பெங்களூர் -மைசூர் இடையேயான 10 வழி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன்மூலம் பெங்களூர்-மைசூர் இடையேயான பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறைந்துள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியை பிரபல ரவுடி சந்தித்ததாகவும், இருவரும் பரஸ்பரம் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்ததாகவும் போட்டோவை வெளியிட்டு காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டை கூறியுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கர்நாடகா சென்று பல்வேறு பணிகளை துவக்கி வைத்து வருகிறார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
இந்நிலையில் தான் கர்நாடகா தலைநகர் பெங்களூர்-மைசூர் இடையே 4 வழிச்சாலை இருந்தது. இதனை 10 வழித்தடத்துடன் கூடிய எக்ஸ்பிரஸ் காரிடாராக மாற்ற திட்டமிடப்பட்டது. ரூ.8350 கோடி செலவில் பணிகள் தீவிரமாக நடந்து முடிந்தது.

நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி
இதில் 10 வழிச்சாலையில் 6 வழித்தடங்கள் நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கும், மீதமுள்ள 4 வழித்தடங்கள் சர்வீஸ் ரோடுகளாகவும் அமைக்கப்பட்டது. இதன்மூலம் 3 மணிநேர பயணம் 75 நிமிடமாக குறையும் வகையில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவில் உள்ள கெஜ்ஜலகெரே கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அந்த சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையடுத்து தற்போது போக்குவரத்து துவங்கி நடைபெற்று வருகிறது.

விவாதத்தை கிளப்பிய போட்டோ
இந்நிலையில் தான் விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் வகையில் மண்டியா அருகே பிஇஎஸ் கல்லூரியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு பிரதமர் மோடி வந்திறங்கினார். இதையடுத்து பிரதமர் மோடியை முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகின. இதில் ஒரு போட்டோ தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரவுடிக்கு வணக்கம்
அதாவது பெங்களூர் வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருந்த பைட்டர் ரவி என்ற மல்லிகார்ஜூன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். அதாவது பாஜக தலைவர்களுடன் சேர்ந்து அவர் பிரதமர் மோடியை வரவேற்றுள்ளார். பைட்டர் ரவி பிரதமர் மோடியை கையெடுத்து கும்பிடும் நிலையில் மோடியும் பரஸ்பரம் கையெடுத்து கும்பிட்டுள்ளார். இருவரும் பரஸ்பரம் கையெடுத்து கும்பிடும் போட்டோ தான் தற்போது வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்
இதுதொடர்பான போட்டோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு கடுமையாக சாடியுள்ளது. உலகிலேயே பாஜகவை போன்ற வெட்கக்கேடான ஒரு கட்சி கிடையாது. பிரதமர் மோடி ரவுடியான ரவிக்கு வணக்கம் செய்கிறார் என விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சி, "உலகில் பாஜகவை போன்ற வெட்கக்கேடான கட்சி இல்லை. ரவுடி ரவிக்கு முன்பு பிரதமர் கைகூப்பி நிற்கிறார். இது பிரதமர் பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று கூறிய கட்சி தற்போது வெட்கக்கேடான வகையில் பிரதமரை வரவேற்க ரவுடி ஷீட்டர் முன் நிற்க வைத்துள்ளது'' என சாடியுள்ளது.

பைட்டர் ரவி சொல்வது என்ன?
இந்நிலையில் தான் பைட்டர் ரவி வரும் தேர்தலில் மண்டியா மாவட்டம் நாகமங்களா சட்டசபை தொகுதியில் போட்டியிட பாஜகவிடம் சீட் கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி பைட்டர் ரவி கூறுகையில், ‛‛பிரதமர் மோடியை வரவேற்க பாஜக வாய்ப்பளித்ததை வாழ்வின் பெருமையான தருணமாக நினைக்கிறேன். என் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் எனது பெயரை கெடுக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்'' என்றார்.

மத்திய அமைச்சர் விளக்கம்
இதற்கிடையே தான் சம்பவம் குறித்து கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛ரவி என்பவர் யார்? என பிரதமர் மோடிக்கு தெரியாது. பிரதமரை சந்திக்க அனுமதிக்கப்பட்ட நபர்களின் பெயர் பட்டியலை எஸ்பி கண்காணித்து இருக்க வேண்டும். இது நடக்கவில்லை. இந்த குறைபாட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பல்ல. ரவி ஏன் பிரதமரை சந்திக்க வந்தார் என்பது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications