நெகிழ வைத்த மோடி.. மேடையில் ஜேடிஎஸ் நிர்வாகி காலை தொட்டு வணங்கிய பிரதமர்! யார் இந்த மாஜி எம்எல்ஏ?
பெங்களூர்: பிரதமர் மோடி நேற்று கர்நாடகாவின் சிக்கபள்ளாப்புராவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் திடீரென்று கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் மாஜி எம்எல்ஏ ஒருவரின் காலை 3 முறை தொட்டு வணங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வரும் 26ம் தேதியும், 2வது கட்டமாக மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே மாதம் 7 ம் தேதியும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. பாஜக, ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. இந்நிலையில் தான் முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள சிக்கப்பள்ளாப்புரா தொகுதியில் நேற்று பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். முன்னதாக பிரதமர் மோடி மேடையில் அமர்ந்திருந்தபோது பாஜக மற்றும் ஜேடிஎஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடாவுடன் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.

இந்த வேளையில் திடீரென்று ஜேடிஎஸ் நிர்வாகியும், பெங்களூர் புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான நிசர்கா நாராயணசாமி பிரதமர் மோடி அருகே வந்து பிரதமர் மோடியின் கழுத்தில் ஜேடிஎஸ் கட்சியின் துண்டை அணிவித்தார். அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்ட நிலையில் திடீரென்று நிசர்கா நாராயணசாமி, மோடியின் காலில் விழுந்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி உடனடியாக தனது தலையை அசைத்து காலில் எல்லாம் விழக்கூடாது என தெரிவித்தார். அதோடு மட்டுமின்றி பிரதமர் மோடி உடனடியாக குனிந்து நிசர்கா நாராயணசாமியின் காலை 3 முறை தொடடு கும்பிட்டார். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications