எடியூரப்பா பற்றி ஊழல் செய்தி ஒளிபரப்பு செய்த டிவி சேனல்.. எடிட்டர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு
பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினர் ஊழலில் ஈடுபட்டு உள்ளதாக செய்தி ஒளிபரப்பிய தனியார் டிவி சேனல் மேலாண்மை எடிட்டர் மற்றும் நெறியாளர் வீடுகளில், காவல் துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
பவர் டிவி என்ற பெயரில் கன்னட சேனல் ஒன்று இயங்கி வருகிறது .இதன் மேலாண் இயக்குனர் மற்றும் ஆசிரியராக இருப்பவர் ராகேஷ் ஷெட்டி.
இந்த தொலைக்காட்சி சேனலில் கடந்த மாதம் எடியூரப்பா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியிடப்பட்டது.
பொதுத் துறை கான்ட்ராக்டர்
ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனம் கர்நாடக அரசு பொதுப் பணித்துறை திட்டங்கள் பலவற்றை எடுத்து செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவர் குறிப்பிட்ட இந்த தொலைக்காட்சியின் எடிட்டர் ராகேஷ் ஷெட்டியுடன் பேசிய கலந்துரையாடல்கள் அடிப்படையில் டிவி சேனலில் செய்திகள் ஒளிபரப்பாகின.
வாட்ஸ்அப் சாட்டிங்
றிப்பிட்ட இந்த கட்டுமான நிறுவனத்தின் அதிகாரிகளுடன் எடியூரப்பா குடும்ப உறுப்பினர்கள் வாட்ஸ்அப் சாட் மூலமாக உரையாடியது உள்ளிட்ட தகவல்கள் டிவி சேனலில் ஒளிபரப்பாகின. மேலும் கட்டுமான நிறுவனத்திடமிருந்து எடியூரப்பா குடும்ப உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் பணம் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்கு விபரம் உள்ளிட்டவையும் அந்த டிவி சேனலில் ஒளிபரப்பானது.
விசாரணை தேவை
இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. உச்சநீதிமன்றத்தில் பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து இந்த விவகாரம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால் எடியூரப்பா இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று மறுத்தார்.
திடீர் திருப்பம்
இந்த நிலையில்தான் செப்டம்பர் 24ஆம் தேதி கட்டுமான நிறுவன இயக்குனர் சந்திரகாந்த் ராமலிங்கம் காவல்துறையில் ஒரு புகாரை பதிவு செய்தார். அந்தப் புகாரில் தன்னை பவர் டிவி எடிட்டர் ராகேஷ் வந்து அணுகி பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திடம் பெண்டிங்கில் உள்ள பில் தொகை 140 கோடியை விரைவாக பெற்றுத்தர, உதவுவதாகவும் அதற்குப் பதிலாக 5 சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
எடிட்டர் ஏமாற்றியதாக புகார்
இதையடுத்து பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திடம் இருந்து நிலுவைத் தொகையில் 7.7 9 கோடி வழங்கப்பட்டது. இதற்கு கமிஷனாக ராகேஷுக்கு, 25 லட்சம் ரூபாய் எங்களது நிறுவனம் வழங்கியது. மேலும் தனக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தேசிய பாஜக தலைவர்களுடன் பழக்கம் இருப்பதாகவும் எனவே மத்திய அரசின் ஒப்பந்தங்களையும் எங்கள் நிறுவனத்துக்கு வாங்கித் தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். மேலும், அரசியல்வாதிகள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு நான் கமிஷன் தொகை கொடுத்ததாக பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதை ஒளிப்பதிவு செய்தார். என்னை ஏமாற்றி இவ்வாறு பேச வைத்து அதை தனது டிவி சேனலில் ஒளிபரப்பு செய்து விட்டார்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
பல பிரிவுகளில் வழக்கு
இதையடுத்து காவல்துறையினர் பவர் டிவி சேனல் எடிட்டர் ராகேஷ் மீது, கிரிமினல் நோக்கம், ஏமாற்றுதல், மிரட்டி பணம் பறித்தல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதுதான் அவரிடமும் டிவி சேனல் நெறியாளர் இடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். எடியூரப்பாவின் குடும்பத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தி செய்தி ஒளிபரப்பியதால்தான் காவல் துறை மூலமாக ஊடக நிறுவனத்திற்கு, நெருக்கடி கொடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில், இது பற்றி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தன்னால் எந்த பதிலும் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்துவிட்டார்.