பிரஜ்வல் வழக்கில் மத்திய அரசிடம் ஒத்துழைப்பு இல்லை.. கர்நாடக காங்கிரஸ் அரசு குற்றச்சாட்டு
பெங்களூர்: பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி கர்நாடக அரசு கடிதம் எழுதி இருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அம்மாநில அரசின் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா, பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியாயின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வரும் முன்பாக பிரஜ்வல் ரேவண்னா வெளிநாட்டிற்கு தப்பிவிட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். தற்போது ஜெர்மனியில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
அவர் பெங்களூர் திரும்ப டிக்கெட் பதிவு செய்து வைத்து இருந்ததாகவும் அதையும் தற்போது ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரேவண்ணாவிற்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ள அதிகாரிகள், பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இதே கோரிக்கையை முன்வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி போலீசார் கடிதம் எழுதி இருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பதிலில் கூறியதாவது:-
ஹாசனில் வெளியான ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவர் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டு வைத்திருப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, சித்தராமையா கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்திற்கும் மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்டு பிறப்பித்த பின்பு, அந்த ஆதாரத்தின் பேரில் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி மத்திய வெளியுறவுத்துறைக்கு காவல்துறையினர் கடிதம் எழுதி இருந்தார்கள். காவல்துறை எழுதிய கடிதத்திற்கும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்த வழக்கில் கர்நாடக அரசை காட்டிலும், மத்திய அரசு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய முடியும். மத்திய அரசு, கர்நாடகத்திற்கு உதவி செய்ய வேண்டும். நீதிமன்றம் கைது வாரண்டு பிறப்பித்த பின்பு பாஸ்போர்ட்டை ரத்து செய்வது மத்திய அரசின் கடமை ஆகும். பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அரசின் தலையீடு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications