பெங்களூர் சிறையில் கைதிகள் உல்லாசம்.. வேலையை இழந்த சூப்பிரண்டு உள்பட 2 அதிகாரிகள்!
பெங்களூர்: பெங்களூரில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள பயங்கரவாதி, பெண்களை பலாத்காரம் செய்தவர்கள் உள்பட பலரும் செல்போன், டிவி பயன்படுத்தினர். அதேபோல், மதுபானம் குடித்து கும்மாளம் அடித்த வீடியோ வெளியானது. இதையடுத்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. தலைமை சூப்பிரண்டு பணிஇடமாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சூப்பிரண்டு உள்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் பரப்பன அக்ரஹாராவில் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு கைதிகளிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அதிகாரிகள் சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலாவிற்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக வீடியோக்கள் வெளியாகி சில ஆண்டுகளுக்கு முன்பு விவாதத்தை கிளப்பியது.

அதேபோல் ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் தொடர்பான போட்டோக்களும் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு நடிகை ரன்யா ராவ் உடன் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு என்று கைதான நடிகர் தருண், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த ஜூஹாத் ஹமீ் ஷகீல் மன்னா, தொடர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் கைதான உமேஷ் ரெட்டி உள்ளிட்டவர்கள் செல்போன்களை பயன்படுத்தி உள்ளனர்.
மேலும் சிறை அறையில் உள்ள டிவியின் அருகே இருந்து போன் பேசும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையானது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்குள் கைதிகள் பாட்டு போட்டு நடனமாடி மது விருந்து கொண்டாடிய வீடியோ வெளியாகி மீண்டும் விவாதத்தை கிளப்பியது.
இதையடுத்து கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விசாரணைக்கு உத்தரவிட்டார். சிறைத்துறையிடம் அறிக்கை கேட்ட அவர் தனி கமிட்டி அமைத்து உத்தரவிட்டார். மேலும் அங்கு சிறைத்துறை அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சிறையில் கைதிகளுக்கு செய்து கொடுக்கப்பட்ட சொகுசு வசதிகள், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதித்தார்.
அதன்பிறகு அவர் கூறுகையில், ‛‛சிறை விதிமீறல் பற்றி விசாரிக்க சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஹிதேந்திரா தலைமையில் ஒரு குழு அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த குழுவில் ஐ.ஜி. சந்தீப் பட்டீல், போலீஸ் சூப்பிரண்டு அமர்நாத் ரெட்டி, இன்னொரு அதிகாரி ரிஷ்யந்த் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த குழு ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.
மேலும் சிறையின் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அதன்படி, பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமை சூப்பிரண்டு சுரேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சூப்பிரண்டு இமாம்சாப் மாகேரி, உதவி சூப்பிரண்டு அசோக் பஜந்திரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications