அடடே.. அசத்தல் அறிவிப்பு.. செம குஷியில் கர்நாடக தனியார் பள்ளி மாணவர்கள்!
பெங்களூர்: கர்நாடக அரசு ஒரு சூப்பர் முடிவை எடுத்ததை அறிவித்து, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளது.
விஷயம் இதுதான்.. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பலருக்கும் வேலை பறிபோனது, செய்த தொழிலில் லாபம் குறைந்தது, இப்படி பல்வேறு பொருளாதார சிக்கல்களை மக்கள் எதிர்கொண்டனர்.
இதனால் பள்ளி கட்டணங்களை, கல்லூரி கட்டணங்களைச் செலுத்துவதற்கு, பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

தவணை கட்டணம்
பல மாநில அரசுகளும், அந்தந்த மாநிலங்களில் உள்ள தனியார் பள்ளிகள் இன்ஸ்டால்மெண்ட் அடிப்படையில் கல்விக் கட்டணத்தை பெற வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. கர்நாடக அரசும் இதுபோன்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. இருப்பினும் முழு கட்டணத்தையும் செலுத்துவதற்கு பல பெற்றோரால் முடியவில்லை.

கொந்தளித்த பெற்றோர்கள்
எனவே கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் வீட்டு முன்னால் அமர்ந்து பெற்றோர்கள் சிலர் தர்ணா போராட்டம் நடத்தினர். பள்ளிக் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை எழுப்பினர்.

ஸ்கூலுக்கே போகல, கட்டணம் ஏன்?
"இந்த ஆண்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் பயிலவில்லை.. எனவே பள்ளிகளுக்கு வாகனச் செலவு கிடையாது.. கட்டிடத்தை பராமரிக்க வேண்டிய செலவு கிடையாது.. அப்படி இருந்தும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவதால் மொபைல் போன், இணையதள சேவை போன்றவற்றால் பெற்றோருக்குத்தான் கூடுதல் செலவாகிறது.. ஆனால் பள்ளிகள் முழு கட்டணத்தையும் கேட்கின்றனர். தவணை முறையில் கேட்டாலும் முழு கட்டணத்தை நாங்கள் தானே செலுத்தியாக வேண்டும், இந்த காலகட்டத்தில் அது பெரிய சுமையாக இருக்கிறது.." என்று பெற்றோர்கள் குமுறினர்.

டியூசன் கட்டணத்தில் 30 சதவீதம் தள்ளுபடி
இந்த நிலையில்தான் அமைச்சர் சுரேஷ் குமார் நேற்று ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் டியூசன் கட்டணத்தில் 70 சதவீதம் மட்டுமே பெறவேண்டும். 30% தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ, மாநில பாடத் திட்டம் உள்ளிட்ட எந்த பாடத்திட்டத்தை கற்றுக்கொடுக்கும் பள்ளியாக இருந்தாலும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

வேறு கட்டணம் வாங்கவே கூடாது
மேம்பாட்டுக் கட்டணம், டொனேஷன், பள்ளி வாகன செலவு, கல்வியை தாண்டிய விஷயங்களுக்காக வாங்கப்படும் கட்டணங்கள், உள்ளிட்ட எதையும் 2020-21ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் பெறக்கூடாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, ஏற்கனவே மாணவர்களின் பெற்றோர் முழு தொகையையும் செலுத்தி விட்டால், எஞ்சிய தொகையை பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும். அல்லது வரும் கல்வியாண்டில் இதை கழித்துக்கொண்டு குறைவான கட்டணத்தை பெற வேண்டும் என்று சுரேஷ்குமார் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முதல்வர் எடியூரப்பாவிடம் ஆலோசனை செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக நிலவரம்
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. ஆனால், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications