ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்! திக்கி திணறிய பெங்களூர்! நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 11 பேர் பலி
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு கர்நாடக அரசு, கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி பெங்களூர் வந்தடைந்த ஆர்சிபி அணியினரை கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் வரவேற்றார். தொடர்ந்து பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் அருகே வந்தபோது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். கூட்டத்தில் சிக்கி சிலர் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 10 பேர் காயம் அடைந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 ஆண்டு காத்திருப்புக்கு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றுள்ளது. நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக பெங்களூர் அணி கோப்பையை வென்றது. அந்த அணி வெற்றி பெற்றதில் இருந்து ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமடைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரசிகர்கள் தள்ளுமுள்ளு
நேற்று இரவு முழுக்க பெங்களூரில் பட்டாசுகளை வெடித்து வெறித்தனமாக கொண்டாடினர். தொடர்ந்து இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் அருகே கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல் பேரணிக்கும் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேரணி ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து பாராட்டு விழாவுக்காக பெங்களூர் அணியினர் பெங்களூர் விமான நிலையம் வந்தனர். அப்போது விமான நிலையத்தில் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் உற்சாகத்துடன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இதன் பின்னர் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்து வீரர்கள் வருகை தந்தனர். ஏற்கனவே அங்கு வீரர்களை வரவேற்க தயாராக இருந்த ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
11 பேர் பலி
அதிகளவில் ரசிகர்கள் கூடி உற்சாகத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். அப்போது, சிலர் மயங்கி விழுந்தனர். போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தினர். இதேபோல் ஸ்டேடியத்தின் 7வது கேட் பகுதியில் அதிகளவில் கூட்டம் திரண்டது. இதில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசல் ஏற்பட்டத்தில் ரசிகர்கள் சிக்கி காயமடைந்தனர்.
முதற்கட்டமாக 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 11 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications