“தேசிய கொடியின் பச்சை நிறத்தை ஸ்ரீ லட்சுமியாக பாருங்கள்..” ஆர்எஸ்எஸ் மோகன் பகவத்தின் புது விளக்கம்
பெங்களூர்: நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்திற்கு புதிய விளக்கத்தை கொடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பக்கம் கடலும், ஒரு பக்கம் நிலமும் கொண்டிருந்த நம்முடைய நாட்டையும், அதன் வளங்களையும் பிரிட்டிஷ்காரர்கள் ஒட்ட சுரண்டி கொழுத்தனர். ஒருபுறம் இருப்பவர்கள் செழித்திருக்க மறுபுறம் இல்லாதவர்கள் துவண்டிருக்க விடுதலை உணர்வு தீப்பற்றிக்கொண்டது. ஏராளமான போராட்டங்கள், உயிர் தியாகங்கள், பொருள் இழப்புகளை நாம் சுதந்திரத்திற்காக கொடுத்திருக்கிறோம்.

இப்படியான போராட்டத்தின் விளைவாக இன்று நாம் நம்முடைய உரிமைகளை காப்பாற்றி வைத்திருக்கிறோம். நாடு சுதந்திரம் அடைந்தபோது உருவாக்கப்பட்ட மூவர்ணகொடி 'சுதந்திர இந்தியாவின்' அடையாளங்களில் முக்கியமானதாக இருந்தது, தற்போதும் இருந்து வருகிறது. இந்திய காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய தலைவர்களில் ஒருவரான பத்ருதீன் தியாப்ஜியன் மனைவி சுரையா தியாப்ஜிதான் இந்த தேசிய கொடியை வடிவமைத்துள்ளார்.
முதலில் காவி நிறமும், பின்னர் வௌ்ளை நிறமும் அதில் நீல நிற அசோக சக்கரமும், இறுதியாக பச்சை நிறமும் உடையதாக இந்த கொடி வடிவமைக்கப்பட்டது. இந்த மூன்று நிறங்களுக்கும் ஒவ்வொரு விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது காவி நிறம் பலத்தையும், தைரியத்தையும் குறிக்கும். வெள்ளை நிறம் உண்மையையும், அமைதியையும் குறிக்கிறது. அதில் உள்ள அசோக சக்கரம், புத்தனின் காலடியை, உடலை, சிந்தனையைத் தாங்கி நின்றது. இது வாழ்க்கை சுழற்சியை குறிக்கிறது. அதேபோல இறுதியாக உள்ள பச்சை நிறம் வளர்ச்சியையும் வேளாண் செழிப்பையும் குறிக்கும்.
ஆனால், சமீப காலங்களாக தேசிய கொடியின் உண்மையான அர்த்தங்கள் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அந்த வகையில் இன்று பெங்களூரில் தேசிய கொடியை ஏற்றி வைத்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அதிலிருந்த மூவர்ணத்திற்கு கூறிய விளக்கமும் தற்போது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
அவர் பேசியதாவது, "மூவர்ண கொடியில் இருந்து பெறப்பட்ட செய்திகளின் வழியில் நாடு முன்னேறி உலகிற்கு வழிகாட்ட வேண்டும். இந்தியா உலகை அறிவூட்டும் திறனை கொண்டிருக்க வேண்டும். நாம் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும், தேசிய கொடியில் கொடுத்துள்ள அர்த்தத்தின் அடிப்படையிலும் நாம் செயல்பட வேண்டும். எதிர்மறை சக்திகள் வெற்றிபெறாத வகையில் தேசத்தை ஒன்றிணைக்க வேண்டும்.
நாம் சூரியனை வணங்குகிறோம். எனவேதான் நம்முடைய தேசத்தை பாரதம் என்று அழைக்கிறோம். அதில் பா என்பது ஒளியை குறிக்கிறது. சுதந்திர தினத்தன்று சூரியனை வணங்குதல் அர்த்தமுள்ள ஒன்றாகும். பாரதம் எனும் சொல் இதைத்தான் குறிக்கிறது. இந்த உலகுக்கு அறிவூட்டுவதற்காகவே பாரதம் சுதந்திரம் அடைந்தது. எனவே இந்த கடமையை நிறைவேற்ற நாம் நமது தேசிய கொடியின் முக்கியத்துவத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்.
கொடியின் உச்சியில் இருக்கும் காவி நிறம், தொடர்ச்சியான உழைப்புடன் வாழ்க்கையை தமசோமா ஜோதிர்கமய(இருளிலிருந்த வெளிச்சத்தை நோக்கி என்பதை குறிக்கும் சம்ஸ்கிருத சொல்) திசையில் வழிநடத்த வேண்டும் என்பதை குறிக்கிறது. நடுவில் இருக்கும் வெள்ளை நிறம், அனைவரும் சுயநலத்தை நீக்கி தூய்மையுடன் பணி செய்ய வேண்டும் என்பதை குறிக்கிறது.
இறுதியாக இருக்கும் பச்சை நிறத்தை ஸ்ரீ லட்சுமியாக சித்தரிப்பது அறிவார்ந்த ஆன்மீகமாகும். இது உயர்ந்த மற்றும் தன்னலமற்ற வலிமையை பெற உதவும். இதுதான் தேசிய கொடி உணர்த்தும் செய்திகள்" என்று கூறியுள்ளார். தேசிய கொடியின் அர்த்தம் வேறாக இருக்க, மோகன் பகவத் வேறு அர்த்தத்தை குறிப்பிட்டு பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications