ஆபத்தான குகையில் 2 மகள்களுடன் ரஷ்ய பெண் செய்த செயல்.. அதிர்ந்துபோன கர்நாடகா போலீஸ்
பெங்களூர்: ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்த ரஷ்ய சுற்றுலா பயணி தனது 2 மகள்களுடன் கர்நாடகாவின் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் செய்த செயல் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. தற்போது வரை போலீசார் மீட்ட அவர் குகையில் தங்கியது ஏன்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகே ராமதீர்த்தா மலை அமைந்துள்ளது. இந்த மலை அடர் வனப்பகுதியாகும். இங்கு கடந்த 9 ம் தேதி கோகர்ணா போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்து இருக்கும் குகைக்கு அருகே வெளிநாட்டு பெண் ஒருவர் நடமாடுவது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வெளிநாட்டு பெண், 2 மகள்களுடன் தங்கியிருப்பது தெரியவந்தது. அதனை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் நினா குதினா. வயது 40. இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். அவரது மூத்த மகள் பெயர் பிரேமா (6). 2வது மகள் பெயர் அமா (4). நினா தனது மகள்களுடன் நம் நாட்டுக்கு சுற்றுலா வந்தார். கோவா டிரிப்பை முடித்த அவர் அங்கிருந்து கர்நாடகாவின் கோகர்ணாவுக்கு சுற்றுலா வந்தார்.
ஆன்மிகத்தில் நினாவுக்கு அதிக நாட்டம் இருந்தது. இதனால் அவர் வனப்பகுதியில் தங்கி தியானம் மற்றும் பிரார்த்தனை செய்ய முடிவு செய்தார். சுற்றுலா தலம் உள்பட பிற நகரங்களில் மக்கள் அதிகமாக இருக்கின்றனர். இதனால் அவர் அமைதியான முறையில் வனப்பகுதியில் தியானம் செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர் தனது 2 மகள்களுடன் அடர் வனத்தின் குகையில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
நினா தங்கியிருந்த குகை மிகவும் ஆபத்து நிறைந்தது. அந்த குகை பகுதியில் கடந்த 2024 ஜூலை மாதம் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல் ஆபத்து நிறைந்த வனவிலங்குகள் இந்த இடத்தில் அதிகமாக நடமாடுகின்றன. விஷப்பாம்புகள் உலா வரும். ஆனால் நினா அந்த ஆபத்தை உணராமல் தனது 2 மகள்களுடன் அங்கு தங்கியிருக்கிறர்.
இதையடுத்து நினாவுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதன்பிறகு கும்டா தாலுகா பன்கிகொட்லா கிராமத்தில் 80 வயது பெண் துறவியான சுவாமி யோகரத்னா சரஸ்வதி நடத்தும் ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவரது விசா உள்பட பிற ஆவணங்களை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதுபற்றிய விவரங்களை வழங்க நினா தயங்கினார். இறுதியாக அது குகையில் தொலைந்துவிட்டதாக கூறினார்.
இதையடுத்து கோகர்ணா காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் குகைக்கு சென்று தேடினர். அப்போது அங்கு ஆவணங்கள் மீட்கப்பட்டது. , நினா முதலில் 2017 ஏப்ரல் 17 வரை செல்லுபடியாகும் வணிக விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளார். அதன்பிறகு 2018 ஏப்ரல் 19ல் இந்தியாவை விட்டு வெளியேறிய அவர் நேபாளத்துக்கு சென்றார். பிறகு நேபாளத்தில் இருந்து மீண்டும் அவர் இந்தியாவுக்கு வந்த நிலையில் சட்டவிரோதமாக தங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கார்வாரில் உள்ள பெண்கள் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவரை ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications