1970ல் நடந்த திருட்டு.. 55 ஆண்டுகளுக்கு பின் திருடனை கைது செய்த போலீஸ்! எப்படி தெரியுமா? சுவாரசியம்
பெங்களூர்: கர்நாடகாவில் 1970ம் ஆண்டில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய வழக்கில் 55 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 78 வயது நிரம்பிய முதியவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அந்த நபர் யார்? இந்த வழக்கின் பின்னணி என்ன? 55 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சிக்கியது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
‛பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்'.. இது பழமொழி. நம் ஊர்களில் அடிக்கடி இதனை சொல்வது உண்டு. தொடர்ந்து குற்றம் செய்யும் நபர் என்றாவது ஒருநாள் சிக்குவார். அப்போது சட்டம் தன் கடமையை செய்யும் என்பது தான் அதன் அர்த்தம்.

அந்த வகையில் இந்த பழமொழியை உண்மை என நிரூபிக்கும் சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது. திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவரை கர்நாடக போலீசார் 55 ஆண்டுகளுக்கு பிறகு மாநில எல்லை கடந்து கேரளாவில் கைது செய்துள்ளனர்.
இப்போது கைதாகி உள்ள நபரின் பெயர் சிஆர் சந்திரன். இவர் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1970ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி காரில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றார். கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட புல்லெரிகட்டே எனும் இடத்தில் சோதனை சாவடி உள்ளது. அங்கு அவரது கார் சென்றது.
சோதனை சாவடியில் இருந்த போலீசார் சந்திரனின் காரை சோதித்தனர். அப்போது அவரது காரில் சந்தனமர கட்டைகள் இருந்தன. அவர் சந்தனமரங்களை வெட்டி கடத்தி கேரளாவுக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து புத்தூர் புறநகர் போலீசார் அவரை கைது செய்தனர். கார், சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன்பிறகு சில நாட்களுக்கு பிறகு சந்திரன் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சந்திரன் கேரளாவுக்கு சென்றார். இருப்பினும் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால் சந்திரன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரை பிடிக்க வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. போலீசாரும் சந்திரனை தேடிப்பார்த்தனர். கேரளா சென்று போலீசார் பார்த்தனர். ஆனால் சந்திரன் பற்றிய எந்த விவரமும் கிடைக்கவில்லை.
இப்படியாக 55 ஆண்டுகள் கடந்துவிட்டது. சந்திரனை பற்றிய எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு அப்படியே கிடப்பில் கிடந்தது. இதற்கிடையே தான் சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் பெண்டிங் இருக்கும் வழக்குகளை முடிப்பது பற்றி உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்த சந்தன மரம் கடத்தல் தொடர்பான வழக்கில் தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து போலீசார் சிறப்பு நடவடிக்கையை எடுத்தனர். சந்திரனின் போட்டோ, அவர் ஓட்டிய கார் எண் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கேரளாவில் முகாமிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்திரனை பற்றிய சிறுசிறு தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது. இறுதியாக கோழிக்கோடு அருகே புல்லிக்கால் எனும் கிராமத்தில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். தற்போது கைதாகி உள்ள சந்திரனுக்கு 78 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications