கொரோன பீதி.. சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை.. சிறைத்துறை அதிகாரி திட்டவட்ட மறுப்பு
பெங்களூரு: கொரோனா வைரஸ் பீதி காரணமாக சசிகலா ஜாமீனில் விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது. இந்த தகவலை சிறைத்துறை அதிகாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சசிகலா ஜாமினில் விடுதலை இல்லை என்றார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா உள்பட கர்நாடகாவில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகளை பார்க்க அனுமதி இல்லை என அம்மாநில சிறைத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பீதியால் சிறிய சிறிய குற்றங்கள் செய்தவர்கள், சில விசாரணை கைதிகள் நாடு முழுவதும் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் கொரோனா பீதியால் சிறையில் உள்ள சசிகலா ஜாமீனில் விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரி மறுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பீதியால் சசிகலா உள்பட எந்த ஒரு தண்டனை கைதியும் ஜாமினில் விடுவிக்கப்பட முடிவு இல்லை. இது தொடர்பாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.












Click it and Unblock the Notifications