பெங்களூரில் இருந்தபடியே.. அதிரடியை ஆரம்பித்த சசிகலா.. அடுத்த "டார்கெட்" என்ன தெரியுமா?
பெங்களூர்: ஒருபக்கம் பெங்களூர் ரிசார்ட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தாலும்.. இரட்டை இலையை கைப்பற்றியே தீருவது, என்பதில் ஓய்வில்லாமல் யோசித்துக் கொண்டு இருக்கிறார் சசிகலா.
இதை அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அளித்த பேட்டி உறுதி செய்துவிட்டது. பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்து காரில் வெளியே வரும் போது, கார் முன்பக்கத்தில் அதிமுக கட்சி கொடியை கட்டிதான், வெளியே வந்தார் சசிகலா.
ஆரம்பமே அதிரடி சரவெடியாக இருக்கிறது என்று தமிழகம் முழுக்க பேசிக் கொண்டிருந்தன. கர்நாடகாவிலும் தான்.
பெங்களூர் மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ்- தேவனஹள்ளி பண்ணை வீட்டில் ஒருவாரம் சசிகலா முகாம்
சசிகலா காரில் அதிமுக கொடி
இதன் மூலம், அதிமுக பொதுச்செயலாளர் நான்தான்.. ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை எனது அனுமதி இல்லாமல் உருவாக்கியது தவறு என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் சசிகலா. ஏற்கனவே இதே கோரிக்கையோடு அவர் தொடர்ந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. எனவே, அதிமுக கட்சி கொடியை கட்டியதில் தவறே கிடையாது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சின்னம் முக்கியம்
டிஸ்சார்ஜ் செய்துநாளிலேயே இத்தனை அதிரடி காட்டிய சசிகலா, அதன்பிறகு சும்மாவா இருப்பார் . அவரது அடுத்த இலக்கு இரட்டை இலை சின்னம் என்று தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தை பொருத்த அளவில், ஒவ்வொரு தேர்தல்களிலும் சின்னம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சிங்கம் சின்னத்தில் போட்டியிட்ட ஒருவருக்கு எம்ஜிஆர் பிரச்சாரம் செய்து கூட இரட்டை இலை சின்னத்துக்கு தான் மக்கள் ஓட்டு போட்டனர் என்பது வரலாறு.
இரட்டை இலைக்கு எதிராக எம்ஜிஆர்
1977ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அய்யாசாமி என்பவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்தார் எம்ஜிஆர். அவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் சில முரண்பாடு காரணமாக எம்ஜிஆர், கடைசி நேரத்தில் அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தார். தேர்தலில் பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எம்ஜிஆரே, "இரட்டை இலைக்கு ஓட்டு போடாதீர்கள்" பாலகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்ட சிங்கம் சின்னம்தான் அதிமுகவுக்கு இந்த தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம். அவர்தான் எனது ஆதரவாளர் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார். அதாவது இரட்டை இலைக்கு ஓட்டு போடாதீர்கள் என்று எம்ஜிஆரே பிரச்சாரம் செய்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது.
இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட மக்கள்
ஆனால் நிலைமை என்ன ஆனது தெரியுமா? மக்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டார்கள். எம்ஜிஆர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஓட்டு போடவில்லை. அலங்கியம் பாலகிருஷ்ணன் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அய்யாசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளரை விட, 2682 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதுதான் சின்னம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான உதாரணம்.
மாஸ் தலைவர்
அந்த காலகட்டத்தில், பெரிய மக்கள் ஆதரவு கொண்ட மாஸ் தலைவராக அறியப்பட்ட, எம்ஜிஆரே வேண்டாம் என்று, கேட்டுக் கொண்டாலும் கூட, இரட்டை இடையில் மக்கள் ஓட்டு போட்டனர் . ஆனால், இப்போது அப்படியான ஒரு மாஸ் தலைமை இல்லாத நிலையில், இரட்டை இலை சின்னம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை சசிகலா உணர்ந்து இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு
இதுபற்றி அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். கொரோனா காலம் என்பதாலும், சசிகலா சிறையில் இருந்ததாலும், இதுநாள் வரை காத்திருந்தோம். இனிமேல் வழக்கு தொடர்வது தான் அடுத்த கட்ட பணி என்று தெரிவித்துள்ளார். அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இரண்டுமே தங்களுக்கு வேண்டும் என்பதுதான் சசிகலா திட்டமாக உள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றம்
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு, தேர்தல் ஆணையம், ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் இவ்வாறு சின்னம் ஒதுக்கீடு செய்தது சரிதான் என்று 2019ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பின்னர் உச்சநீதிமன்றமும் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் இது தொடர்பான இரண்டு மனுக்களை டிஸ்மிஸ் செய்து உள்ளது. இந்த நிலையில்தான், சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சசிகலா வழக்கறிஞர் கூறியுள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் ஏதேனும் சட்ட முரண்பாடுகள் இருப்பின் சீராய்வு மனு செல்லுபடியாகும். மற்றபடி பெரும்பாலும் சீராய்வு மனுக்கள் விசாரணையின்போது வெற்றி பெறுவது கிடையாது.
இரட்டை இலை முக்கியம்
ஆனால் சசிகலா தரப்புக்கு, சட்டப்படி, எஞ்சியிருப்பது இப்போது இந்த ஒரு ஆப்ஷன் மட்டும்தான். எனவே அதை பயன்படுத்தி எப்படியாவது இரட்டை இலை சின்னத்தை பெற்று விட வேண்டும் என்பதில் அவரது சட்ட வல்லுநர் குழு தீவிரமாக இயங்கி வருகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சட்ட வல்லுனர்கள் பதிலடி கொடுப்பதற்கு தயாராகி வருகிறார்கள். இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. பெங்களூரில் இருந்த படி, தமிழகத்தின் அத்தனை அரசியல் பரபரப்புகளையும் உன்னிப்பாக, கவனித்து வருகிறார் சசிகலா.