கார்கே கைக்கு போன ரிப்போர்ட்.. தலைமை சந்தித்த பிறகு செல்வப்பெருந்தகை பரபர! அடுத்து பாயும் ஆக்ஷன்
பெங்களூர்: தமிழ்நாட்டில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்பாகக் கடந்த சில நாட்களாகவே சர்ச்சை நிலவும் சூழலில் இது தொடர்பாக கார்கேவை சந்தித்து அறிக்கை அளித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. இந்த விவகாரத்தில் கார்கே நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார் என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் சூழலில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுக- பாஜக இணைந்து ஒரு வலுவான என்டிஏ கூட்டணியை உருவாக்கியுள்ளது.

மறுபுறம் திமுக கூட்டணியில் கடந்த சில காலமாகவே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாட்சி குறித்துப் பேசும் கருத்துகள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கேவை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார் செல்வப்பெருந்தகை! இதற்காக அவர் பெங்களூர் சென்றிருந்தார். இந்தச் சந்திப்பின் போது கார்கேவிடம் கூட்டணி சர்ச்சைகள் குறித்தும் அதற்கு யார் காரணம் என்பது குறித்தும் செல்வப்பெருந்தகை ரிப்போர்ட் கொடுத்தாக சொல்லப்படுகிறது.
கார்கே உடனான சந்திப்பை முடித்துக் கொண்டு வந்த செல்வப்பெருந்தகையும் கூட சலசலப்புகள் குறித்து கார்கேவிடம் அறிக்கை அளித்துள்ளதை உறுதி செய்தார். இந்தச் சர்ச்சைகள் குறித்து கார்கேவுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் தலைமையே இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அங்கு செய்தியாளர்களிடம் மேலும் பேசிய செல்வப்பெருந்தகை, "இரண்டு, மூன்று நாட்களாகத் தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பாகவும் கூட்டணி தொடர்பாகவும் சில சர்ச்சைகள் வந்துள்ளன. அந்த சர்ச்சைகள் ஏன் ஏற்பட்டன.. எதற்காக ஏற்பட்டது என்பது குறித்த விவரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்தேன்.
மாணிக்கம் தாகூர் விவகாரம் குறித்து கார்கேவுக்கு தெரிந்து இருக்கிறது. எல்லா தகவல்களும் அவருடன் சென்றுள்ளது. தேவையான நடவடிக்கை எடுப்பதாக கார்கே உறுதியளித்துள்ளார். காங்கிரஸில் என்ன நடந்தது என்பது குறித்து அறிக்கை அளித்துள்ளேன். கார்கவேடிம் இது தொடர்பாக எடுத்து கூறினேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications