மனைவிக்கு மனை ஒதுக்கீடு.. சித்தராமையா சிஎம் சீட்டுக்கு 'வேட்டு' வைக்கும் பாஜக!
பெங்களூர்: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் ரூ4,000 கோடி முறைகேடு, மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு மற்றும் வால்மீக வாரிய முறைகேடுகளை முன்வைத்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்து போராட்டங்களை நடத்தி வருகிறது பாஜக. ஆனால் தாம் தவறே செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்யவே முடியாது என திட்டவட்டமாக கூறி வருகிறார் சித்தராமையா.
கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக துணை முதல்வர் டிகே சிவகுமார் தரப்பு காங்கிரஸுக்குள்ளேயே கலகக் குரல் எழுப்பி வருகிறது. டிகே சிவகுமாருக்கே முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என போர்க்கொடி தூக்குவதால் சித்தராமையா முதல்வர் பதவிக்கு காங்கிரஸுக்குள்ளேயே நெருக்கடி உருவாக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் அடுத்தடுத்த முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதுவும் சித்தராமையாவுக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் ரூ4,000 கோடி முறைகேடு, சித்தராமையா மனைவிக்கு சட்டவிரோதமாக வீட்டு மனை ஒதுக்கீடு, வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் ரூ187 கோடி முறைகேடு ஆகியவற்றை முன்வைத்து சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறது பாஜக. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்துகிறது.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து பெங்களூரில் முதல்வர் சித்தராமையா வீட்டை பாஜகவினர் நேற்று முற்றுகையிட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, எந்த வழக்காக இருந்தாலும ்சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக கோருவது ஏன்? பாஜக ஆட்சியில் அத்தனை வழக்குகளும ்சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டதா? மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்த விசாரணை முடியும் வரை வீட்டு மனை ஒதுக்கீட்டையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. என் மனைவியிடம் நிலத்தைப் பெற்றதால் வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. என் பங்கு இதில் என்ன இருக்கிறது? இதில் எந்த விதிமீறலும் இல்லை. ஆகையால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications