தொடர் தோல்வியில் இருந்து திசைதிருப்பவே பாஜகவின் இந்த ரூ.2000 நோட்டு நாடகம்.. சித்தராமையா பாய்ச்சல்!
பெங்களூர் : 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. நாளை கர்நாடகா முதல்வராகப் பதவியேற்கவுள்ள சித்தராமையா, "பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி." என விமர்சித்துள்ளார்.
தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. 2016 டிசம்பரில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோதே காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வந்த நிலையில், இன்று 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
கர்நாடகாவில் நாளை முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா இதுகுறித்துக் கூறுகையில், "பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி. ரூ.2000 நோட்டை இப்போது நிறுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது என்றால், 2016ல் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?

பிரதமர் மோடியால் மீண்டும் ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டுள்ளது. தங்கள் கொள்கைகளிலேயே தெளிவில்லாமல் இருக்கும் ஒரே ஆட்சி பாஜக ஆட்சி." என சித்தராமையாக காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நிதி அமைச்சராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ள சித்தராமையா 13 முறை மாநிலத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர். சித்தராமையா நாளை கர்நாடகா முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications