பெங்களூரில் திடீரென மியூக் கிளப்பை ஆரம்பித்த பிரபல தமிழ் பாடகர் விஜய் பிரகாஷ்! எதற்காக தெரியுமா?
பெங்களூர்: தென்னிந்தியாவின் முக்கிய பாடகர்களில் ஒருவரான விஜய் பிரகாஷ், இப்போது மியூசிக் கிளப் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இசையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு இசையை கற்றுக் கொடுக்க இந்த மியூசிக் கிளப்பை ஆரம்பித்துள்ளதாக அவர் சொல்கிறார். மேலும், கர்நாடகா முழுக்க ஒர்க்ஷாப்களை நடத்தவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தென்னிந்தியாவைச் சேர்ந்த மிக முக்கியமான பாடகர்களில் ஒருவர் விஜய் பிரகாஷ். இவர் தமிழில் ஓ சோனா, நெஞ்சுக்குள்ள நீ எனப் பல ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார். இன்னுமே கூட தமிழ் சினிமாவில் டாப் பாடகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் பிரகாஷ், பெங்களூரில் புதிய மியூசிக் கிளப்பை தொடங்கியுள்ளார்.

விஜய் பிரகாஷ்
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் தனது சொந்த மாநிலத்தில் "வி.பி. கல்ச்சர் கிளப்" என்ற பெயரில் இந்த மியூசிக் கிளப்பை ஆரம்பித்துள்ளார். இது பெங்களூரின் பனசங்கரியில் அமைந்துள்ளது. இங்கு இசையத் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காகப் பல்வேறு ஒர்க்ஷாப்கள் நடத்தப்படுகிறது.
அதன்படி ஹரிதாச பாடல்களான 'தேவரநாமங்கள்' குறித்த முதல் ஒர்க்ஷாப் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஒர்க்ஷாப்பிற்கு வரவேற்பு மிகச் சிறப்பாக இருந்ததாக விஜய் பிரகாஷ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் "எனக்கு இன்று கிடைத்துள்ள எல்லா விஷயங்களுக்கும் இசை தான் காரணம். இதனால் இசை சமூகத்திற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.
மியூசிக் கிளப்
இதன் காரணமாகவே நானும் என் மனைவி மஹதியும் (இவரும் பாடகர்) சேர்ந்து, இந்த இசை கிளப்பை ஆரம்பிக்க முடிவு செய்தோம். இசையை கற்றுக் கொள்ளவும், மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான ஒரு கம்யூனிட்டியாக இது இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கிளப்பில் 15 முதல் 20 பேர் கொண்ட குழு இருக்கிறது. இவர்கள் பலதரப்பட்ட இசை ஒர்க்ஷாப்களை நடத்துவார்கள். ஒர்க்ஷாப்கள் பெரும்பாலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்குமாம். இருப்பினும், சில சமயங்களில், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆடியோ மாதிரிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்துவம்
ஒர்க்ஷாப்பில் ஒவ்வொருவர் மீதும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகக் குறைந்த அளவிலேயே இளைஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அப்போது தான் ஒவ்வொருவர் மீதும் தனிக் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இசை மட்டுமின்றி இந்த கிளப்பில் நடனம் மற்றும் பிற கலைகளுக்கும் ஒர்க்ஷாப்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனராம். இதற்காக அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்களும் அழைக்கப்படுவார்களாம்.
கர்நாடகா முழுக்க
பெங்களூர் மட்டுமின்றி மாநிலம் முழுக்க உள்ள சிறிய ஊர்களுக்கும் கூட இந்த ஒர்க்ஷாப்களை எடுத்துச் செல்ல விஜய் பிரகாஷ் திட்டமிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "சரி கமப நிகழ்ச்சியில் நடுவராக இருந்தபோது தான் கர்நாடக மாநிலம் முழுக்கவே அபாரமான திறமைகள் இருப்பதை உணர்ந்தேன். ஆனால் பலராலும் இசைப் பள்ளிகளில் சேர முடிவதில்லை. இணைய வழி கற்றல் வசதிகளும் கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதனால், என் அனுபவங்களையும், என் சீனியர்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் பகிர்ந்து கொள்ள இதுபோல பல ஒர்க்ஷாப்களை நடத்தத் திட்டமிட்டுள்ளேன்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications