"யாருமே இல்லைனு கவலை படாதீங்க.. நான் வரேன்.." வெறிச்சோடிய கர்நாடக பாஜக ஆபீசில் புகுந்த "நல்ல பாம்பு!"
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் அங்கே ஆபீசில் இருந்த பாஜக தொண்டர்கள் திடீரென அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
கர்நாடகாவில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. அங்கே மொத்தம் இருக்கும் 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகக் கடந்த புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.

அதில் பதிவான அனைத்து வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை: தபால் வாக்குகள் எண்ணப்பட்ட சமயத்தில் பாஜகவே முன்னிலையில் இருந்தது. அதேநேரம் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படத் தொடங்கியவுடன் நிலைமை மாறியது. அதன் பின்னர் காங்கிரஸ் முன்னிலைக்கு வந்தது. அங்கே மொத்தம் 113 இடங்களில் வென்றால் பெரும்பான்மை கிடைக்கும் என்ற சூழலில் காங்கிரஸ் கட்சி இப்போது சுமார் 110 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
இதன் காரணமாகக் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். டெல்லி மற்றும் பெங்களூர் காங்கிரஸ் அலுவலகங்களில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அதேநேரம் பாஜக அலுவலகங்கள் நேர்மாறாகவே இருக்கிறது. பாஜக அலுவலகங்கள் வெறிச்சோடியே இருக்கிறது. இப்படி வெறிச்சோடி இருப்பதாலோ என்னவோ அங்கே திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
பாம்பு: கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நான்காவது முறையாகப் போட்டியிடும் ஷிகாவ்ன் தொகுதியில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது.
அங்கே ஷிகாவ்னில் இருக்கும் பாஜக அலுவலக வளாகத்திற்குள் திடீரென பாம்பு ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிய பாஜக தொண்டர்கள் அங்கே இருந்து ஓட்டம் பிடித்தனர். இதன் பின்னர் அந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. இதையடுத்து கட்டிடத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
ஷிகாவ்ன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான் பதான், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்கே உன்னிப்பாகக் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கிறது. தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் பசவராஜ் பொம்மை இங்கே வெல்ல வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
கடும் போட்டி: கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கே பாஜக, காங்கிரஸ் மற்றும் மஜத இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் கடந்த 1985க்குப் பிறகு எந்தவொரு கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் கடந்த புதன்கிழமை நடந்த தேர்தலில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இப்போது வரை காங்கிரஸ் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்பது போன்ற சூழலே இருக்கிறது. இதே டிரெண்ட் தொடர்ந்தால் அங்கே காங்கிரஸ் எளிதாக ஆட்சியை அமைக்கும். அதேநேரம் பாஜக சுமார் 80 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications