ஒரே இரவில் நடந்த களேபரம்.. அதிரடி மூவ்களால் பாஜகவிற்கு செக் வைத்த சபாநாயகர்.. மனம் மாறிய அமித் ஷா!
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சபாநாயகரின் அதிரடியான நடவடிக்கைகளின் காரணமாக பாஜக கட்சி கர்நாடகாவில் உடனடியாக ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் இன்றே ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த செவ்வாய் கிழமை காங்கிரஸ் - மஜத கூட்டணி சார்பாக குமாரசாமி நடத்தி வந்த ஆட்சி கலைந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி கலைந்தது.
13 காங்கிரஸ் மற்றும் 3 மஜத எம்எல்ஏக்கள் உட்பட 16 கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி கலைந்தது. ஆனால் பாஜக தலைவர் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார்.
ஏன் இல்லை
ஆம் இரண்டு நாட்கள் ஆகியும் கூட ஆட்சி அமைக்க உரிமை கோராமல் பாஜக தரப்பு காலம் தாழ்த்தி வந்தது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா எந்த விதமான முக்கிய முடிவுகளையும் அறிவிக்காமல் காலம் தாழ்த்திக்கொண்டு சென்றார். இதனால் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாத நிலை நீடித்தது.இது பாஜக தொண்டர்களை கோபம் அடைய செய்தது.
பாஜக திட்டம் என்ன
பாஜக எடியூரப்பாவிற்கு பதில் வேறு யாரையாவது முதல்வராக முன்னிறுத்தலாம் என்று திட்டமிட்டது. அதேபோல் இன்னும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி மாற வாய்ப்புள்ளது. அது வரை பொறுத்திருக்கலாம். அதன்பின் ஆட்சி அமைத்து, பின் 16+ தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்று திட்டமிட்டது. ஆனால் பாஜகவின் திட்டங்களை தற்போது அம்மாநில சபாநாயகர் ரமேஷ் குமார் தவிடு பொடியாக்கி உள்ளார்.
ரமேஷ் குமார்
நேற்று இரவு அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரில் மூன்று பேரை நேற்று ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி மற்றும் கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் ஆகியோரை ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். கட்சி தாவல் தடை சட்டத்தை இவர்கள் மீறிவிட்டதாக கூறி இவர்களை தகுதி நீக்கம் செய்தார்.
ஏன் முடியாது
பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோராமல் இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்தினால் மீதம் இருக்கும் 13 எம்எல்ஏக்களையும் அவர் தகுதி நீக்கம் செய்து இருப்பார். பாஜக ஆட்சி அமைக்கும் வரை இவர்தான் சபாநாயகராக நீடிப்பார். அதனால் பாஜக அமைக்கும் முன் மீதம் இருக்கும் 13 எம்எல்ஏக்களையும் அவரால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.
என்ன அவசரம்
இதனால் பாஜக அவசர அவசரமாக இன்று ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது. மீதம் இருக்கும் 13 எம்எல்ஏக்களை அவர் தகுதி நீக்கம் செய்யும் முன் பாஜக ஆட்சி அமைத்து, சபாநாயகரை மாற்ற திட்டமிட்டுள்ளது. ஒருவேளை 13 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தால், அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது. இது அந்த 13 பேருக்கும் பெரிய சிக்கலாகும்.
என்ன கோரிக்கை
இதனால் தங்களை தகுதி நீக்கம் செய்யும் முன் ஆட்சியை பிடித்து சபாநாயகரை மாற்றுங்கள் என்று 13 எம்எல்ஏக்களும் பாஜக தலைமைக்கு கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. அவர் தகுதி நீக்கம் செய்துவிட்டால் நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது, பின் அமைச்சராகவும் முடியாது. ராஜினாமா செய்தது எல்லாம் வீணாகிவிடும், ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என்று இவர்கள் எல்லோரும் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
இதனால்தான்
இதனால்தான் அமித் ஷா உடனடியாக மனம் மாறினால் என்கிறார்கள். இதனால்தான் தற்போது பாஜக அதிரடியாக களமிறங்கி ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது. நாளை வரை ஒருவேளை பாஜக காலம் தாழ்த்தி இருந்தால் 13 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கி இருப்பார். ஒரே இரவில் சபாநாயகர் ரமேஷ் குமார் செய்த அதிரடி பாஜகவை துரிதமாக செயல்பட வைத்துள்ளது.