கர்நாடகாவில் ட்விஸ்ட்.. பாஜக, காங்கிரசுக்கு ஷாக்.. கிங்மேக்கராகும் ஜேடிஎஸ்!சர்வே முடிவில் பரபர தகவல்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஆளும் பாஜக 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் எனவும், 2வது இடத்தில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருகட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாவதோடு, ஜேடிஎஸ் கட்சி தான் கிங்மேக்கராக மாறும் என்பது இந்த புதிய கருத்து கணிப்பில் உறுதியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு மே மாதம் 13ல் முடிவுகள் வெளியாக உள்ளன.

இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி இடையே நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. தற்போது பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
கருத்து கணிப்புகள்: பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கின்றன. சில கருத்து கணிப்புகள் மட்டுமே பாஜகவுக்கு சாதகமாக இருக்கின்றன. இருப்பினும் கூட சில கருத்து கணிப்புகளை தவிர பெரும்பாலானவை மாநிலத்தில் தொங்குசட்டசபை தான் உருவாகும் என தெரிவித்து வருகின்றன. அதாவது மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் இந்த இடங்கள் கிடைக்காது என தெரிவிக்கின்றன. இதனால் கர்நாடகாவில் மீண்டும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி தான் கிங்மேக்கராக மாறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய கருத்து கணிப்பு: இருப்பினும் ஜேடிஎஸ் உதவியின்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சி அரியனைணயில் அமர காங்கிரஸ் கட்சியும் வியூகங்கள் வகுத்து வருகின்றன. இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய புதிய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. Spike Media Network மற்றும் அஜய் பவுண்டேஷன் இணைந்து இந்த கருத்து கணிப்பை நடத்தியது. கர்நாடகாவின் அனைத்து தொகுதிகளிலும் மார்ச் 11 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை இந்த கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 18,573 பேர் கூறிய கருத்துகளின் அடிப்படையில் தற்போது கருத்து கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பு முடிவு: அதன்படி நடைபெற உள்ள கர்நாடகா தேர்தலில் யாருக்கும் தனிமெஜாரிட்டி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக ஆளும் பாஜகவே 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகும் எனவும், காங்கிரஸ் கட்சி 2ம் இடம் பிடிக்கும் எனவும், ஜேடிஎஸ் கட்சி வழக்கம்போல் 3ம் இடத்தில் இருக்கும் எனவும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் மும்பை-கர்நாடகா, சென்ட்ரல் கர்நாடகா, கடலோர கர்நாடகா உள்ளிட்ட மண்டலங்களில் பாஜக அதிக இடங்களில் வெல்லும் எனவும், ஹைதரபாத் கர்நாடகா, ஓல்டு மைசூர் மண்டலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும், பெங்களூரை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சமமான தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக: இந்த கருத்து கணிப்பின்படி மும்பை கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் 50 தொகுதிகளில் பாஜக கூட்டணி 34 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களிலும் வாகை சூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் கர்நாடகாவில் மொத்தம் 25 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதி்ல பாஜக 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர கர்நாடகா மண்டலங்களில் 19 தொகுதிகளில் 15 தொகுதிகளை பாஜக அள்ளும் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஹைதராபாத் கர்நாடகா மண்டலத்தில் 41 தொகுதிகளில் பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் ஜேடிஎஸ் 2 இடங்களிலும், பிற கட்சியினர் 2 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓல்டு மைசூர் பகுதியில் மொத்தம் 57 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும் ஜேடிஎஸ் 20 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் மண்டலத்தில்(பெங்களூர் + பெங்களூர் புறநகர்) மொத்தம் 32 தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் யூபிஏ கூட்டணி தலா 15 தொகுதிகளை கைப்பற்றும், ஜேடிஎஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக முன்னிலை: இந்த நிலவரப்படி பார்த்தால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 39.22 சதவீத ஓட்டுகள் பெற்று 104 தொகுதிகளிலும் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி 38.13 சதவீத ஓட்டுகள் பெற்று 93 இடங்களை கைப்பற்றும். ஜேடிஎஸ் கட்சி 13.72 சதவீத ஓட்டுகளுடன் 24 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகள் தவிர 5.40 சதவீதம் ஓட்டுகளுடன் மற்றவர்கள் 3 இடங்களில் வெற்றி பெறலாம் என கருத்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications