வாங்கண்ணா வணக்கங்கண்ணா! வைகோவை அப்படியே அமுக்கும் விஜய்! திமுக கூட்டணியில் விழும் அடுத்த விக்கெட்?
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக முதல்வர் விஜய் இடையேயான திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறப் போகிறது என்ற தகவல்கள் பரவி வரும் சூழலில் நடைபெற்றுள்ள சந்திப்பு நடைபெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களை உலுக்கியுள்ளது. இந்நிலையில் விஜய் வைகோவுக்கு மிகப் பெரிய ஆஃபர் ஒன்றையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளாராம்..
முதல்வர் விஜயை நேரில் சந்தித்த வைகோ, சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிகள் நடக்கின்றன, அதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள தனது நாடாளுமன்ற உரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு முதல்வர் விஜயிடம் அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் வைகோ கூறினார்.
வைகோ
ஆனால் இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் தான் அதிகம் இருப்பதாக மதிமுக மற்றும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக திமுக கூட்டணியில் மதிமுக அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக வரவிருக்கும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், வைகோவின் இல்லத்துக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று பேசினார். அதன்பிறகே முதல்வர் விஜய் - வைகோ சந்திப்பு உறுதியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்
வைகோ மீது விஜய்க்கு தனிப்பட்ட மரியாதை இருப்பதாகவும், அவரை அரசியலில் உரிய முறையில் கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் அந்த சந்திப்பில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது, முதல்வர் விஜயின் பதவியேற்பு நிகழ்ச்சியையும் வைகோ பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதவிப்பிரமாண நிகழ்வை எடுத்துக்காட்டாக கூறிய வைகோ, விஜய் எந்த தவறும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் பதவிப்பிரமாணம் செய்ததை பாராட்டியதாக கூறப்படுகிறது.
ஸ்டெர்லைட் விவகாரம்
இதையடுத்து இருவரும் தமிழக அரசியல், திராவிட இயக்க வரலாறு, முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் வைகோவுக்கு இருந்த உறவு, திமுகவின் அரசியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் விவாதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக, வேதாந்தா நிறுவனத்தின் செயல்பாடுகள், ஆலையை எதிர்த்து நடைபெற்ற சட்டப் போராட்டங்கள் மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து வைகோ விரிவாக எடுத்துரைத்ததாகவும், முதல்வர் விஜய் அதனை கவனமாக கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி
இந்த சந்திப்புக்கு பிறகு அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படும் விஷயம் ராஜ்யசபா உறுப்பினர் பதவிதான். திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகினால், வைகோவை அரசியல் ரீதியாக தவெக அணுகும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மதிமுக நிர்வாகிகள் சிலர், வைகோவின் நீண்டகால அரசியல் அனுபவத்தையும், தேசிய அரசியலில் அவருக்கு உள்ள மதிப்பையும் கருத்தில் கொண்டு, அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எம்எல்ஏக்கள் ராஜினாமா
குறிப்பாக முதல்வர் விஜயுடன் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கம் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் மதிமுகவின் இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப்போகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, "யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது" என்று வைகோ பதிலளித்தார். ஆனால், அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, மதிமுக சார்பில் வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ராஜினாமா செய்ய விருப்பம் இல்லையென கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜ்யசபா வாய்ப்பு
இதனால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில், ராஜினாமா விவகாரத்தில் வைகோ அவசர முடிவு எடுக்க விரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுவாக இருந்தாலும், விஜய் - வைகோ சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தானா? அல்லது புதிய கூட்டணிக்கான அச்சாராமா? என்பது தான் தற்போது மிகப் பெரிய விவாதமாக உள்ளது. அதேநேரத்தில், வைகோவுக்கு ராஜ்யசபா வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்விக்கும் வரும் நாட்களில் பதில் கிடைக்கலாம் என்கின்றனர் மதிமுகவினர்.












Click it and Unblock the Notifications