தமிழகம் முழுக்க நாடக காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்ட உதவி.. மோகன்ஜி பதிவு
விழுப்புரம்: தமிழகம் முழுக்க நாடக காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உடன் நிற்பதற்கும், உதவுவதற்கு ஒரு அமைப்பு தேவை என பலர் என்னுடன் தொலைபேசியில் கோரிக்கை வைக்கிறார்கள்.. எதிர் தரப்பில் குறைந்தது 20 வழக்கறிஞர்கள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் உடனடியாக ஒன்று கூடுகிறார்கள் எனவும் அவர்களை எதிர்த்து இந்த அமைப்பு களத்தில் நிற்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள் என்று இயக்குனர் மோகன்ஜி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
சரியாக படிக்காமல், ஊர் சுற்றிக்கொண்டு, மது அருந்திக்கொண்டு, கஞ்சா அடித்துக்கொண்டும் சில இளைஞர்கள், எதிர்காலம் பற்றி எந்த புரிதலும் இல்லாமல் பருவ வயதில் 16 முதல் 18 வயது பெண்களை காதலிக்கிறார்கள். அந்த பெண்ணும் பருவ வயது கோளாறால் காதல் வயப்படுகிறார். இந்த காதலுக்காக பெற்றோரை எதிர்த்து பெண்கள் திருமணம் செய்கிறார்கள்.

காதலின் பெயரில் மகள், எதிர்காலத்தை பற்றி எந்த புரிதலும் இல்லாதவரை வாழ்க்கை துணையாக ஏற்பதை எந்த பெற்றோரும் ஏற்பது இல்லை... இது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதேபோல் சிலர் நன்கு வசதியான படித்த பெண்களை, காதல் வயப்படுத்தி அவர்கள் மூலமாக வளமாக வாழ வேண்டும் என்று முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
திருப்பத்தூரில் ஒரே சாதி என்கிற போதிலும், மகளை காதலித்து திருமணம் செய்த இளைஞர் மீது பெற்றோர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். பொம்பள பொறுக்கி, குடிகாரன், இல்லாத பழக்கமே இல்லை என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவர்கள் கண்ணீர் மல்க பேசிய வீடியோவை பார்த்த இயக்குனர் மோகன் ஜி முக்கியமான பதிவினை வெளியிட்டுள்ளார். இவர் நாடக காதலுக்கு எதிராக திரைப்படங்களை எடுத்து வந்தவர் ஆவார்.
அந்த வகையில் இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகம் முழுக்க நாடக காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உடன் நிற்பதற்கும், உதவுவதற்கு ஒரு அமைப்பு தேவை என பலர் என்னுடன் தொலைபேசியில் கோரிக்கை வைக்கிறார்கள்..
எதிர் தரப்பில் குறைந்தது 20 வழக்கறிஞர்கள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் உடனடியாக ஒன்று கூடுகிறார்கள் எனவும் அவர்களை எதிர்த்து இந்த அமைப்பு களத்தில் நிற்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.. இதற்கு என்ன வழி.. இந்த பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு வழிகாட்ட வழக்கறிஞர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்க முடியாதா.. இல்லை எதாவது ஒரு அமைப்பு தயார் என்றால் ஒரு பிரஸ் மீட் வைத்து உங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.. பாவப்பட்ட இந்த பெற்றோர்களுக்கு வழிகாட்டுங்கள்.." இவ்வாறு கூறியுள்ளார்.
இதுபற்றி ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "திருமணத்திற்குப் பெற்றோரின் சம்மதச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டிய நேரம் இது. மேலும், தனிநபர் சுதந்திரத்தின் கீழ் நடக்கும் சோசலிச, கம்யூனிச, காதல் ஜிஹாத் எனும் தீய தந்திரங்களை நிறுத்த வேண்டும். தங்கள் பிள்ளைகளின் (மகன் அல்லது மகள்) திருமண முடிவுகளில், அரசுக்கு உள்ள உரிமையை விட பெற்றோருக்குக் கருத்துச் சொல்ல அதிக உரிமை உண்டு...
உறவில் கம்யூனிசத்தை உரிய நேரத்தில் நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "சாதிகளை எண்ணிக்கையால் மோதவிடாதீர்கள். வன்னியர் - தலித் என மக்களைப் பிரித்து பயமும் வெறுப்பும் பரப்புவது சமூகப் பொறுப்பல்ல. தமிழ்நாட்டின் எதிர்காலம் சாதி பெருக்கத்தில் இல்லை; சமத்துவம், சகோதரத்துவம், கலப்பு திருமணங்களில்தான் உள்ளது" என்று கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications