ஆம்ஸ்ட்ராங் கொலைதான் சென்னையில் திமுக தோற்க காரணமா? பா.ரஞ்சித் சொல்வது சரியா? கிளம்பிய விவாதம்!
சென்னை: அண்மையில் திமுகவின் தோல்விக்கு கடந்த ஆட்சியில் தலித் பிரச்சனைகளை மோசமாக கையாண்டதே காரணம் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். குறிப்பாக மறைந்த தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சென்னையில் பெரிய அரசியல் மாற்றத்தை விதைத்ததாக பேசி இருக்கிறார். இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டசபைத் தேர்தலில் திமுக அடைந்த தோல்வி குறித்து தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையில் உள்ள 16 தொகுதியில் 2ல் மட்டுமே திமுக வென்றது. இதுதொடர்பாக மறைந்த தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் 2ஆம் ஆண்டு நினைவு நாளில் இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு கருத்தை பேசியுள்ளார்.

அதில் பா.ரஞ்சித் பேசுகையில், திமுக ஆட்சி மாற்றத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதில் முக்கிய காரணமாக தலித் மக்களின் பிரச்சனைகளை திமுக கையாண்ட விதமே முக்கியமாக இருந்ததாக நான் கருதுகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு பட்டியலின மக்களின் வாக்குகள் முக்கிய பங்காற்றின.
பட்டியலின சமூகத்தை திமுக கையாண்ட விதமே சென்னையில் பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கியதாக பார்ப்பதாக தெரிவித்தார். பா.ரஞ்சித்தின் இந்த கருத்து விவாதப் பொருளாக மாறியது. பட்டியலின மக்களின் பிரச்சனைகளை திமுக மோசமாக கையாண்டதாக விமர்சித்திருப்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றவாளிகள் 2 பேர் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதாக பா.ரஞ்சித் கூறி இருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படியென்றால் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி அதிமுக சார்பாக திரு விக நகர் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 23,304 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
கிட்டத்தட்ட டெபாசிட் தொகையே பறிபோனது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையாளிகளில் ஒருவரான பியாந்த் சிங்கிற்கு தூக்கி தண்டனை கொடுக்கப்பட்டது. இதன்பின் மனைவி பிமல் கௌர் கல்சா, 1989ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பஞ்சாப்பின் ரோபர் தொகுதியில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியானார்.
அன்றைய நேரத்தில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற எம்பி இவர்தான். இந்திரா காந்தியை கொலை செய்த நபரின் மனைவுயுடன் நிற்கிறோம் என்று ஒட்டுமொத்த பஞ்சாப் சமூகமும் அவரை வெற்றி பெற வைத்தது. அதேபோல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட வெங்கடேச பண்ணையார் மனைவி ராதிகா செல்வி, 2004ல் திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்திய அமைச்சரவையிலும் பங்காற்றினார்.
இவர்களின் அரசியல் வாழ்க்கையும், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அரசால் பாதிக்கப்பட்ட நபராக தீவிர அரசியலில் இறங்கியவர்கள். அவர்களுக்கு கிடைத்த ஆதரவு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு கிடைக்கவில்லை. தலித் வேட்பாளராக களமிறங்கியும், சென்னையில் பொற்கொடி வெற்றி பெறவில்லை.
தூய்மைப் பணியாளர்களை போராட்டத்தை திமுக முறையாக அணுகவில்லை என்று விமர்சித்தாலும், அந்தப் போராட்டத்தை சரியான நேரத்தில் முடிவுக்கு கொண்டு வந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் தூய்மைப் பணியாளர்களை நேரில் வரவழைத்து சந்தித்தவர் விஜய். ஆட்சி அமைத்த பின் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது தவெக.
இதனால் திமுக சென்னையில் அடைந்த தோல்விக்கு தலித் பிரச்சனைகளை முறையாக அணுகாததே காரணம் என்று பா.ரஞ்சித் பேசியது பல்வேறு சந்தேகங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு திமுகவினர் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். ஏனென்றால் திமுக ஆட்சியில் தான் வடசென்னை மேம்பாட்டுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications