சுனாமி குடியிருப்பு நிலம்.. செங்கல்பட்டு முதியவருக்கு 20 வருடங்கள் கழித்து ஜாக்பாட்
சென்னை: தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி தாக்கியது. இதில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் சார்பில் குடியிருப்புகள் கட்ட அரசு நிலத்தை கையகப்படுத்தியது. அப்படி சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு 200 சதவீத இழப்பீட்டை முதியவருக்கு வழங்க செங்கல்பட்டு கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை தாக்கியது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் நாகப்பட்டினம், செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை, கன்னியாகுமரி உள்பட கடலோர மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்படடன. இதில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் சார்பில் குடியிருப்புகள் கட்டுவதற்காக அரசு சார்பில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் மீனவ குடியிருப்புகள் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட தனது 4 ஏக்கர் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யூர் கிராமத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஆதி கேசவலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், வக்கீல் எம்.ஸ்ரீதர் ஆஜராகி, கையகப்படுத்தப்பட்ட அந்த நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பை விட மிகக்குறைந்த தொகையையே அரசால் இழப்பீடாக வழங்கப்பட்டது என்றும, கட்டாயப்படுத்தி மனுதாரரிடமிருந்து அந்த நிலத்தை அரசுக்காக பதிவு செய்துள்ளனர்" என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில், மனுதாரரின் மகன் கடந்த 2005-ம் ஆண்டு ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.520 வீதம் இழப்பீடு பெற சம்மதம் தெரிவித்தார். அதனடிப்படையிலேயே கடந்த 2013-ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினர் கொடுத்த சம்மதத்தின்பேரில் அந்த நிலத்துக்கு குறைவான இழப்பீட்டுத்தொகையை நிர்ணயம் செய்திருப்பது கிடையாது. ஒரு உறுப்பினரின் சம்மதம், ஒட்டுமொத்த குடும்பத்தையும் கட்டுப்படுத்தாது. 2005-ம் ஆண்டு நிர்ணயம் செய்த தொகை 2013-ம் ஆண்டு செய்யப்பட்ட பத்திரப்பதிவுக்கு ஈடாகாது. எனவே, மனுதாரரை அழைத்து விசாரித்து 2013-ம் ஆண்டு பதியப்பட்ட போது இருந்த உண்மையான சந்தை மதிப்பின் அடிப்படையில் அவருக்கு 200 சதவீத இழப்பீட்டை, 12 சதவீத வட்டியுடன் செங்கல்பட்டு கலெக்டர் வழங்க வேண்டும். வழக்கை முடித்து வைக்கிறேன்" என்று உத்தரவிட்டார்.














Click it and Unblock the Notifications