முதல்வர் பதவி- ஹிமந்த முதல் சிவக்குமார் வரை.. முதுகில் குத்துவதுதான் காங். மேலிடத்தின் கொள்கையா?
பெங்களூரு: கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் நாளை பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழாவை எதிர்க்கட்சி தலைவர்களின் சங்கமமாக- மாநாடாக மாற்றிக் காட்டுவதில் காங்கிரஸ் மேலிடம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் மேலிடம் ஒருவழியாக கர்நாடகா சிக்கலுக்கு தீர்வு கண்டுவிட்டது... அப்படி என்பது அந்த கட்சி தலைமை தம்மை தாமே பாராட்டிக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர் பதவிக்கான ரேஸில் முன்னணியில் இருப்பவர்கள் முதுகில் குத்திவிட்டு கமுக்கமாக இன்னொருவரை முதல்வராக்குவதை ஒரு ஆகப் பெரும் கொள்கையாகவே வைத்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம் என்பது தொடர்ச்சியான நிகழ்வுதான்.
ஹிமந்த பிஸ்வா சர்மா: அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தலில் 2011-ல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அப்போது ஹிமந்த பிஸ்வா சர்மா பெயர்தான் முதல்வர் பதவிக்கு அடிபட்டது. ஆனால் காங்கிரஸின் அசைக்க முடியாத முதல்வராக இருந்த தருண் கோகாய் மகன், கவுரவ் கோகாயை முன்னிலைப்படுத்தினார். காங்கிரஸ் டெல்லி மேலிடமும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தது. இதனால் ஹிம்ந்த பிஸ்வா சர்மா வெறுத்துப் போனார். 2014-ம் ஆண்டு அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு பாஜக ஜோதியில் ஐக்கியமானார். இப்போது பாஜகவின் பிரசார பீரங்கி.. அஸ்ஸாம் மாநில அதிரடி முதல்வராக வலம் வருகிறார்.

ஜோதிராதித்ய சிந்தியா: மத்திய பிரதேசத்தில் 2018 தேர்தல் முடிந்த போது யார் முதல்வர் என்ற பிரச்சனை காங்கிரஸில் எழுந்தது. அப்போது இயல்பாகவே ஜோதிராதித்ய சிந்தியாதான் முதல்வர் பதவிக்கான ரேஸில் முன்னணியில் இருந்தார். ஆனால் இந்த வாய்ப்பை கமல்நாத்துக்கு கொடுத்தது டெல்லி மேலிடம். இதில் கடுப்பான ஜோதிராதித்ய சிந்தியா ஒரு நல்ல நாள் பார்த்து 22 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து காங்கிரஸ் ஆட்சியை குழிதோண்டி புதைத்தார். பாஜகவுக்கு போன ஜோதிராதித்யா சிந்தியா இப்போது மத்திய அமைச்சர்.
சச்சின் பைலட்: ராஜஸ்தானில் 2018 தேர்தல் முடிந்த போது முதல்வர் பதவிக்கான ரேஸில் சச்சின் பைலட்டும் இருந்தார். ஆனால் சீனியர் அசோக் கெலாட்டுக்கு அரியாசனம் கொடுத்தது டெல்லி மேலிடம். சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனாலும் கெலாட்டின் ஆதிக்கத்தை சகிக்க முடியாமல் துணை முதல்வர் பதவியை தூக்கிப் போட்டார் சச்சின் பைலட். இன்று வரை அசோக் கெலாட்டுக்கு எதிராக கலகக் குரலை எழுப்பிக் கொண்டிருக்கிறார். சச்சின் பைலட் காற்று தனி கட்சியாக உருவெடுக்குமா? ஆம் ஆத்மியாக உருமாறுமா? என்பது விரைவில் தெரியவரும்.
டிஎஸ் சிங்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 தேர்தல் முடிவடைந்த போது டிஎஸ் சிங் டியோ, தம்ரத்வாஜ் சாகு, சரண்தாஸ் மகந்த் என பலரும் முதல்வர் ரேஸில் ஓடிக் கொண்டிருந்தனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் பூபேஷ் பாகலுக்கு முதல்வர் பதவியை தூக்கிக் கொடுத்தது. அப்போதும் கூட டிஎஸ் சிங் டியோவுக்கு 2.5 ஆண்டுகளுக்கு பின் முதல்வர் பதவி கிடைக்கும் என வாக்குறுதி கொடுத்தது காங்கிரஸ் மேலிடம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் குழிபறிப்புகளின் சங்கமமாக இருக்கிறது சத்தீஸ்கர் காங்கிரஸ்.
பிரதீபா சிங்: இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிரடி வெற்றி பெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங் மனைவி பிரதீபா சிங்தான் முதல்வர் வேட்பாளர் என கணிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்களும் காங்கிரஸ் மேலிடத்தை மலைபோல நம்பி இருந்தனர். ஆனால் காங்கிரஸ் மேலிடமோ வழக்கம் போல பிரதீபா சிங் முதுகில் குத்திவிட்டு சுக்வீந்தர் சிங் சுகுவை முதல்வராக்கியது. இப்போதும் புகைச்சல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
நவ்ஜோத்சிங் சித்து: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் குழிதோண்டி புதைக்கப்பட்டு கொண்டிருப்பதில் சித்து விவகாரமும் காரணம். அம்ரீந்தர்சிங் முதல்வராக இருந்த போது அவருக்கு ரொம்பவே குடைச்சல் கொடுத்தவர் சித்து. ஆனால் டெல்லி மேலிடமோ சித்துவை செல்லப்பிள்ளையாகவே பார்த்தது. இதனால் வெறுத்துப் போன அம்ரீந்தர்சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸைவிட்டே ஓடிப் போனார். அந்த வெற்றிடத்தில் முதல்வர் நாற்காலியை தங்க தாம்பாளத்தில் வைத்து காங்கிரஸ் மேலிடம் தரும் என இலவு காத்து கிடந்தார் சித்து. ஆனால் சித்துவின் முதுகில் குத்திவிட்டு சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக்கியது காங்கிரஸ் மேலிடம். அப்புறம் என்ன சித்துவும் குய்யோ முறையோ என கூப்பாடு போட்டுப் பார்த்தார். கடந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி பறி போய் ஆம் ஆத்மி சரித்திரம் படைத்து ஆட்சியை கைப்பற்றிவிட்டது.

டிகே சிவகுமார்: இந்த வரிசையில்தான் இப்போது சிவகுமார் இணைக்கப்பட்டுள்ளார். கர்நாடகா தேர்தல் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர் டிகே சிவகுமார். மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர். அவருக்கு முதல்வர் பதவி கிடைகும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ம்ஹூம்.. முட்டி மோதிப் பார்த்தும் சித்தராமையா முதல்வர் ரேஸில் ஜெயித்துவிட்டார். இப்போது டிகே சிவகுமார் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் ஜி பரமேஸ்வர், எம்பி பாட்டீல், முஸ்லிம்கள் துணை முதல்வர் பதவி தரவில்லை என கோபத்தில் கொதித்து கொண்டிருக்கின்றனர். கர்நாடகாவில் மட்டும் காங்கிரஸ் மேலிடம் சகட்டு மேனிக்கு பல சீனியர்களின் முதுகில் குத்தி வைத்துள்ளது. இது என்றைக்கு பூமராங்காக திரும்புமோ?
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications