காவிரி 5-வது கட்ட குடிநீர் திட்டம்: தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியை பாராட்டிய சித்தராமையா, டிகேஎஸ்
பெங்களூர்: வேகமாக வளர்ந்து வரும் பெங்களூரு நகரத்தின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வகையில், காவிரி 5ம் கட்ட குடிநீர் திட்டம் நேற்று வெற்றிகரமாக துவக்கி வைக்கப்பட்டது. முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பெங்களூர் மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், 2014ஆம் ஆண்டு 4,336 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், 775 எம்.எல்.டி. தண்ணீர் கூடுதலாக கிடைக்கும்.

இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் சித்தராமையா, "பெங்களூருவின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 10 ஆண்டுகளுக்கு முன் இந்தத் திட்டத்தை உருவாக்கினோம். இன்று அது நனவாகியுள்ளது. இதன் மூலம் பெங்களூரு நகரின் மூலை முடுக்கெல்லாம் தண்ணீர் கிடைக்கும்" என்று தெரிவித்தார். மேலும், பெங்களூருவின் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு, காவிரி 6ம் கட்ட குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
டி.கே.சிவகுமார் பெருமிதம்: துணை முதல்வர் சிவகுமார் பேசுகையில், "பெங்களூர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி. இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பெங்களூரில் தண்ணீர் பிரச்சனை இருக்காது" என்று தெரிவித்தார்.
பாராட்டு: இந்த நிகழ்ச்சியின்போது, பெங்களூர் குடிநீர், வடிகால் வாரியத் தலைவராக உள்ள ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் செய்த பணிகளை முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் பாராட்டினர். காவிரி 5ம் கட்ட திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதன் மூலம், லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்ததற்காக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ராம்பிரசாத் மனோகரையும், அவரது குழுவையும் பாராட்டினர். ராம்பிரசாத் மனோகர் தமிழகத்தின் ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் குடிநீர் தட்டுப்பாடு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் கடந்த கோடை காலத்தில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாடு, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. குடிநீர் இன்றி மக்கள் தவித்த கடினமான சூழலில், பெங்களூர் குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், தனது திறமையான நிர்வாகத்தால், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்பிரசாத் மனோகர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, இதுபோன்ற கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காவிரி ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததும், நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குச் சென்றதும், பெங்களூரு நகரம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு வழி வகுத்தது. இந்தக் கடினமான சூழலில், ராம்பிரசாத் மனோகர், ஐந்து அம்சங்கள் கொண்ட திட்டத்தை உருவாக்கி, அதை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தினார்.
நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் பயன்படுத்த தடை விதித்தது, வாகனங்களை சுத்தப்படுத்துவோருக்கு அபராதம் விதித்தது, குடிசை வாழ் பகுதிகளில் டேங்கர்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தது, குடிநீர் வடிகால் வாரியத்தின் டேங்கர்களை மட்டுமே பயன்படுத்தாமல், தனியார் மற்றும் மாநகராட்சி டேங்கர்களையும் பயன்படுத்தியது பிரச்சினையின் வீரியத்தை குறைக்க உதவியது.
ராம்பிரசாத் மனோகரின் இந்த முயற்சிகள் வெற்றி பெற்று, பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு குறைந்தது. இந்த திறமையான நிர்வாகத்தை ஐ.நா. சபை, மத்திய ஜல்சக்தி துறை, எப்.கே.சி.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications