9 வருடங்களாக மாதம் ரூ.35,000க்கு வேலை பார்த்த ஐடி ஊழியர்! நாராயணமூர்த்தி இதுக்கு வாய் திறப்பாரா?
பெங்களூர்: இந்தியாவில் உழைப்பு சுரண்டல் கொடூரமாக இருக்கிறது. போதாத குறைக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி போன்றோர், வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்கள். இப்படி இருக்கையில்தான் பெங்களூரில் டெக் நிறுவன ஊழியர் ஒருவர் மாதம் ரூ.35,000 சம்பளத்திற்கு 9 ஆண்டுகள் வேலை பார்த்திருக்கும் சோகம் நடந்திருக்கிறது.
இது குறித்து ரெடிட் சோஷியல் மீடியா தளத்தில் அவர் தனது உழைப்பு சுரண்டல் கதையை பகிர்ந்திருக்கிறார். நெட்டிசன்கள் பலர், "இன்போஸிஸ் நாராயண மூர்த்தி இதற்கெல்லாம் வாய் திறக்க மாட்டாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடையாளமற்ற அடிமைத்தனம்:
தனது அனுபவத்தை பகிர்ந்த டெக் ஊழியர், "நான் 9 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணி செய்திருந்தேன். ஆனால் எனக்கு இறுதியில் வெறும் ரூ.35000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் இதைவிட குறைவாக இருந்தது. ஆனால் இன்கிரிமென்ட் என்கிற விஷயத்தில் வெறும் 1-9 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. சம்பளத்திலும் மாற்றம் இல்லை, அதேபோல பதவி உயர்வும் வழங்கப்படவில்லை.
இதைதவிர, வேறு சில கொடூரங்களும் அந்த நிறுவனத்தில் நடந்தது. அதாவது சொந்த ஊழியர்கள் தங்கள் வாகனங்களை பார்க் செய்தால் அதற்கு கட்டணத்தை வசூலித்தார்கள். பெயருக்கு மட்டும் கேன்டீன் இருந்தது. அதில் எங்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 8 மணிநேரம்தான் வேலை நேரம் என சட்டம் சொல்கிறது. ஆனால் நாங்கள் நேரம் காலம் பார்க்காமல் சுரண்டப்பட்டோம். வீக் எண்ட் நாட்களில் கூட நாங்கள் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டோம்.
செலவுகள்:
அங்குள்ள கேன்டீனில் ஒரு டம்ளர் ஜூஸ் ரூ.40. ஷிப்டு அடிப்படையில் வேலைக்கு வரும்போது, உணவு சில நேரங்களில் தவறிவிடும். பசியிலிருந்து தப்பிக்க ஜூஸ் சாப்பிடலாம் என்று போனால் பணத்தை அப்படியே கறந்துவிடுவார்கள். எனது அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் சென்றுவர ரூ.3200 செலவாகும். நான் வாங்கும் சம்பளத்தில் ஏறத்தாழ 10% இப்படியே போனது.
புதிய வாழ்க்கை:
இப்படி 9 ஆண்டுகளாக அடையாளமற்று அடிமைப்பட்டு இருந்த நிலையில், நான் வேறு வழியின்றி வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறினேன். இது மிகப்பெரிய 4 டெக் நிறுவனங்களில் ஒன்றாகும். இங்கு வந்த பிறகுதான் நான் பழைய நிறுவனத்தில் எவ்வளவு சுரண்டப்பட்டேன் என்பது தெரிய வந்தது. இன்று என்னுடைய மாத சம்பளம் ரூ.1.7 லட்சம். பழைய நிறுவனத்தில் வாங்கிய சம்பளத்தை விட 400% அதிகம். பழைய சம்பளத்தில் என்னால் வீட்டிற்கு கொஞ்சமாகவே பணம் கொடுக்க முடிந்தது.
உயர்ந்து வந்த விலைவாசியையும், பணவீக்கத்தையும் சமாளிக்க கூட அந்த பணம் போதுமானதாக இருக்கவில்லை. இப்போது இந்த சம்பளம் எனக்கு போதுமானதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இவரின் கருத்துக்கள் ரெடிட் தளத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக "விடுமுறை நாட்களில் எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பீர்கள்? சலிப்பாக இருக்காதா? விடுமுறையிலும் உங்களை வேலைக்கு வர வைக்க முடிந்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கும். வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" என்றெல்லாம் இன்போஸிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி பேசியிருந்தார்.
இதை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், டெக் ஊழியர்களின் உழைப்பு சுரண்டலுக்கு எல்லாம் நாராயண மூர்த்தி வாய் திறக்க மாட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் தொடர்ந்து வேலை நேரம் குறித்த சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது இது சாதாரண பேச்சு போல தெரியவில்லை. மாறாக, வேலை நேரத்தை மாற்றியமைப்பது குறித்து அரசு திட்டமிட்டு வருகிறதோ? அதற்கான கருத்து உருவாக்கத்தைதான் இந்திய தொழில் அதிபர்கள் தற்போது சர்ச்சை பேச்சு மூலம் செய்து வருகிறார்களோ? என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications