கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு.. ஐடி நிறுவனங்கள் நிலை என்ன?
பெங்களூர்: லாக்டவுன் கட்டுப்பாடுகளை இன்று முதல் கணிசமான அளவிற்கு குறைத்துள்ளது கர்நாடக அரசு. ஐடி நிறுவனங்களின் இயக்கத்திற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
Recommended Video
கர்நாடகாவில் கண்டைய்ன்மென்ட் பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் உள்ள தொழில் நிறுவனங்கள், மீண்டும் செயல்பட தொடங்கலாம் என்று, அரசு அறிவித்திருந்தது.
இதில் பொதுத்துறை யூனிட்டுகள், பெரிய தொழில்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அடங்கும்.

ஐடி நிறுவனங்கள்
ஐடி நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதால், வெளியூரில் சிக்கியுள்ள பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ஐடி ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள், முடிந்த அளவு, தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க, அனுமதிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய அரசின் கொள்கை முடிவுப்படி ஜூலை 31ம் தேதிவரை, ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா பேட்டி
முதல்வர் எடியூரப்பா அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்தால் ஆச்சரியமில்லை. ஆனால், கர்நாடகாவால் அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அத்தியாவசியமற்றவை உட்பட அனைத்து தொழில்களும் மே 4 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. முகக் கவசம், சானிட்டைசர் மற்றும் சமூக விலகல் விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். இப்போதைக்கு அவை மே 4 முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட முடியும் என்று தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்துக்கு தடை
மே 4ம் தேதி முதல், பொது போக்குவரத்துக்கு கர்நாடகாவில் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே தொழிலாளர்கள் தங்கள் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் அல்லது தங்களது வாகனங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். நிறுவனங்கள் தேவைப்பட்டால் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க அரசு அனுமதிக்கும்.

மதுபானக் கடைகள்
மே 3 க்குப் பிறகும் எந்த ஊரிலும் மால்களும் சினிமா திரையரங்குகளும் செயல்பட அனுமதிக்கப்படாது. மதுபான விற்பனை தொடர்பான முடிவு மே 3 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கலால் மற்றும் நிதித்துறை கஜானாவை நிரப்ப மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்த மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கும் மாநில அரசு காத்திருக்கிறது.

இன்று முதல் தளர்வு
பொது போக்குவரத்து எதுவும் இல்லை என்றாலும், கர்நாடகாவிற்குள் மாவட்டங்களிடையே மக்கள் இயக்கம் நிறுத்தப்படாது. மாநிலத்திற்குள் சிக்கியுள்ள பிற மாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல அரசு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. மற்றபடி பொதுப் போக்குவரத்து மாநிலங்களிடையே அனுமதிக்கப்படாது. சாமராஜ்நகர், கொப்பல், சிக்மகளூரு, ராய்ச்சூர், சித்ரதுர்கா, ராம்நகரா, ஹாசன், சிவமோகா, ஹாவேரி, யாதகிரி, கோலார், தாவணகெரே, உடுப்பி மற்றும் குடகு ஆகிய 14 மாவட்டங்களுக்கு இன்று முதல், இந்த ஊரடங்கு தளர்வு பொருந்தும். பிற மாவட்டங்களுக்கு மே 4ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு பொருந்தும்.












Click it and Unblock the Notifications