லக்கேஜ் ஏத்தியாச்சு.. ஆளுநர் எங்கப்பா? கர்நாடக கவர்னரை கழட்டிவிட்டு சென்ற விமானம்! பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: கர்நாடக மாநில ஆளுநர் விமானத்தில் ஏறுவதற்குள், அவரை விட்டுவிட்டு அவரது லக்கேஜ்களை மட்டும் ஏற்றிக்கொண்டு ஏர் ஏசியா விமானம் ஒன்று புறப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ராய்ச்சூருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கு நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதுதான் இவரது பிளான். இதற்காக முன்கூட்டியே ஏர் ஏசியா விமானத்தில் டிக்கெட் புக் செய்யப்பட்டது. அவர் ஏர்போர்ட்டுக்கு வருவதற்கு முன்னரே லக்கேஜ் அனைத்தும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து புக் செய்யப்பட்ட விமான வந்த நிலையில், அதில் லக்கேஜ்கள் ஏற்றப்பட்டுள்ளன.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஆளுநர் விமான நிலையத்திற்கு வந்து சேரவில்லை. விமானம் புறப்படும் நேரம் நெருங்கியது. பின்னர் திட்டமிட்டபடி விமானம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஆனால் ஆளுநர் அதில் ஏறவில்லை. இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரின் அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "ஆளுநர் விமான நிலையத்தில் காத்திருந்த போதும் கூட அவரை ஏற்றிக்கொள்ளாமல் விமான அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டது.
நாங்கள் அவருடன் டெர்மினல்-2ல் காத்திருந்தோம். ஆனால் விமானம் புறப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறிவிட்டனர். தற்போது இவருடைய லக்கேஜ் அனைத்தும் ஏர் ஏசியா விமானத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நாங்கள் புகார் அளித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர். இதனையடுத்து சுமார் 1.30 மணி நேரம் கழித்து வேறு ஒரு விமானத்தில் அவர் புறப்பட்டு சென்றார். புகார் அளிக்கப்பட்டது தொடர்பாகவோ, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவே ஆளுநர் மாளிகையிலிருந்து எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.

அதேபோல ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் தரப்பிலிருந்தும் எவ்வித தகவலும் இது குறித்து பகிரப்படவில்லை. இருப்பினும் ஆளுநரை இந்த சம்பவம் கடுப்பாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவர்னரை கழற்றிவிட்டுவிட்டு அவரது லக்கேஜை மட்டும் எடுத்துக்கொண்டு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றிருப்பது கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications