கர்நாடகாவில் 'ஆபரஷேன் லோட்டஸ்' தயாராகிறதா பாஜக?.. மத்திய அமைச்சர் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பெரும்பாலானவை கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றன. இந்த நிலையில், கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் என்று பாஜக கூறியுள்ளது.
224 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

மொத்தம் 73 சதவிகித வாக்குகள் பதிவானது. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக 224 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.
கர்நாடகாவை பொறுத்தவரை பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும் கணிசமான செல்வாக்கை கொண்டு இருப்பதால் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில், வரும் சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதற்கிடையே, நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. இதில் கர்நாடகாவில் தொங்கு சட்ட சபைக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறின. இதனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் காங்கிரஸ் கட்சி தற்போதே உற்சாகம் அடைந்துள்ளது.
இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வது போல் அல்லாமல் பாஜக தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷோபா கூறுகையில், "நீங்கள் சொல்லும் ஆபரஷேன் லோட்டஸ் எல்லாம் கர்நாடகாவில் தேவைப்படாது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் துல்லியமாக இருக்காது என்பது உறுதி செய்யப்படும். பாஜக 120-125 இடங்களில் வெற்றி பெறும்.

இந்த முறை கர்நாடக மக்கள் வளர்ச்சிக்காக வாக்களித்து இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு மெஜாரிட்டி எளிதாக கிடைக்கும்" என்றார். ஆட்சியை பிடிக்க போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லையென்றால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வங்கி பாஜக ஆட்சியை பிடிப்பதாகவும் இதற்காக ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் பணத்தை வாரி இறைத்து திட்டம் தீட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது.
கர்நாடகாவில் கடந்த முறை குமரசாமி ஆட்சியை பாஜக ஆபரேஷன் லோட்டஸ் மூலம் கவிழ்த்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இந்த நிலையில் தற்போது தொங்கு சட்ட சபைக்கே கர்நாடகாவில் வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறி வரும் நிலையில், மக்களின் உண்மையான தீர்ப்பு என்ன என்பது மே 13 ஆம் தேதிதான் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications