பணி செய்யும் கூகுள் ஆபீசுக்கு பெற்றோரை அழைத்து சென்ற மகன்.. பிரமித்து தம்பதி சொன்ன வார்த்தை
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது பெற்றோரை அலுவலகத்துக்கு அழைத்து சென்று காண்பித்தார். பிரமாண்டமான அலுவலகத்தை பார்த்து அவர்கள் பிரமித்துப்போனதோடு, மகனை பார்த்து பெருமைப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்த ஊழியர் பகிர்ந்த தகவல் தற்போது வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.
நம் அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். அது என்னவென்றால் நன்றாக படித்து பெரிய நிறுவனங்களில் கைநிறைய சம்பளம் வாங்க வேண்டும். நாம் பணி செய்யும் பிரமாண்ட அலுவலகத்துக்கு பெற்றோரை அழைத்து சென்று சுற்றி காண்பிக்க வேண்டும் என்ற சிந்தனை பலருக்கும் இருக்கும்.

இதில் ஒரு தரப்பினருக்கு இன்னும் கனவாகவே இருக்கும். ஆனாலும் கனவை விட்டு விடாதீர்கள். தொடர்ந்து முயற்சித்து பாருங்கள். விடா முயற்சியால் நிச்சயம் நல்ல நிலைக்கு வரலாம்.
பெங்களூர் கூகுளில் வேலை
அதேவேளையில் மற்றொரு தரப்பினருக்கு அந்த கனவு நனவாகி இருக்கும். இப்போது பெங்களூரில் கூகுள் நிறுவனத்துக்கு தனது பெற்றோரை அழைத்து சென்று தான் பணியாற்றும் அலுவலகத்தை ஊழியர் ஒருவர் சுற்றி காண்பித்து அதுதொடர்பான அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கவனம் பெற்றுள்ளார். அதுபற்றி விவரம் வருமாறு:
பெங்களூரில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியரின் பெயர் விராஜ் சந்திரா. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில் அவர் பணியாற்றும் அலுவலகத்தை பார்க்க பெற்றோர் ஆசைப்பட்டுள்ளனர். அவர்களின் ஆசையை நிறைவேற்ற விரஜ் சந்திரா முடிவு செய்தார்.
பிரமித்துப்போன பெற்றோர்
அதன்படி அவர் தனது பெற்றோரை தான் பணியாற்றும் பெங்களூரில் உள்ள ஆனந்தா கூகுள் நிறுவனத்துக்கு அழைத்து சென்றார். கூகுள் நிறுவனத்தை பார்த்து அவரது பெற்றோர் பிரமித்துப்போயினர். இதுபற்றி விராஜ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்துள்ளார். கூகுள் நிறுவனத்தை குறிக்கும் G எனும் ஆங்கில எழுத்தின் முன்பாக அவர் தனது பெற்றோருடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ளார்.
ஊழியர் கூறியது என்ன?
மேலும் அந்த பதிவில், ‛‛ நான் என்னுடைய பெற்றோரை கூகுள் இந்தியா ஆனந்தா அலுவலகத்துக்கு அழைத்து சென்றேன். இப்போது அவர்கள் தினமும் 5 ஸ்டார் ரெசார்ட்டில் நான் சுற்றி வருவதாக நினைக்கிறார்கள். ஏனென்றால் அது அலுவலகம் போன்ற உணர்வை தரவில்லை என்பதால் அவர்களை குற்றம் சொல்ல முடியாது'' என்றார். அதாவது கூகுள் நிறுவனத்தை அவர்களால் அலுவலகம் என்று நம்ப முடியவில்லை. மாறாக 5 ஸ்டார் ரெசார்ட் போல் உள்ளதாக நினைத்தனர் என்று கூறியிருந்தார்.
நெட்டிசன்கள் ‛கமெண்ட்’
இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்க்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர், ‛‛வாழ்த்துகள் விராஜ். அவர்கள் (பெற்றோர்)இப்போது ரொம்ப பெருமைப்படுவார்கள்'' என்று கூறினார். இன்னொருவரோ, ‛‛இது அழகான நிகழ்வு. ஒருநாள் கண்டிப்பாக நானும் செய்து காட்டுவேன்'' என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
16 லட்சம் சதுரஅடி
விராஜ் சந்திரா பணியாற்றும் பெங்களூர் அலுவலகம் என்பது மொத்தம் 16 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. சமீபத்தில் தான் திறக்கப்பட்டது. உலகளவில் உள்ள கூகுள் நிறுவனங்களில் இதுவும் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இதற்கு ஆனந்தா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு சமஸ்கிருதத்தில் முடிவிலி அல்லது முடிவு இல்லாதது என்று பொருள். ஆங்கிலத்தில் "infinite" அல்லது "limitless" என்று பொருள்படும். வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்துக்கு எல்லையே கிடையாது என்பதை குறிக்கும் நோக்கில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications