பெங்களூர் மேடையில் மோடியை விமர்சனம் செய்த திருமாவளவன்! "என்ன பேசுறீங்க?" திடீர் எதிர்ப்பு.. பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் விசிக எம்பி திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசிக எம்பி திருமாவளவன் கடந்த 24ம் தேதி பெங்களூரை அடுத்துள்ள சர்ஜாப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அம்பேத்கர் சேவா சமிதி அமைப்பின் மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பாபா சாகேப் அம்பேத்கரின் சிலையை திறந்து வைக்க விசிக தலைவரான திருமாவளவன் அழைக்கப்பட்டு இருந்தார்.

என்ன பேசினார்
இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கார் சிலையை திறந்து வைத்து பேசிய திருமாவளவன் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். பிரதமர் மோடி ஒரு வில்லன் என்று ஆங்கிலத்தில் பேசினார். அம்பேத்கார்தான் இந்த நாட்டின் ஹீரோ. அன்று அம்பேத்காருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி.. இன்று அந்த வில்லன் பாத்திரத்தில் இருப்பவர் பிரதமர் மோடி. இந்த நாட்டின் தந்தை.. நவீன இந்தியாவை வடிவமைத்தவர் அம்பேத்கார்.

பிரதமர் மோடி
அம்பேத்கர் வகுத்து கொடுத்த சட்டத்தின் அடிப்படையிலேயே இவர்கள் ஆட்சி செய்கிறார்கள். பிரதமர் மோடி அடித்தட்டு மக்களை கைவிட்டுவிட்டார். அவர் அடித்தட்டு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அம்பேத்கர் கொள்கைக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று பிரதமர் பற்றி திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்தார். அந்த மேடையில் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி (பாஜக), ஆனேக்கல் காங்கிரஸ் எம்எல்ஏ சிவண்ணா ஆகியோரும் இருந்தனர். பல பாஜக நிர்வாகிகளும் இருந்தனர்.

என்ன நடந்தது?
இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து திருமா எழுந்து செல்ல முயன்றார். அப்போது படாபட் சீனிவாஸ் என்ற நிர்வாகி திடீரென மைக் முன் வந்து கத்தி பேசினார். இவர் அமைச்சர் ஏ.நாராயணசாமியின் ஆதரவாளரும் தலித் அமைப்பின் நிர்வாகியும் ஆவார். திருமாவளவன் சார் நீங்கள் என்ன பேசுறீங்க.. சொல்லுங்க.. பிரதமர் மோடி பற்றி இப்படி பேசலாமா? அவர் வில்லன் கிடையாது. அவர்தான் இந்த நாட்டின் ஹீரோ.

ஹீரோ
பிரதமர் மோடிதான் இந்த நாட்டை உலக மேடையில் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். நீங்கள் என்ன பேசுறீங்க.. காங்கிரஸ் இந்த நாட்டிற்காக என்ன செய்தது என்று கடுமையாக கூறினார். இவர் கத்தி கத்தி பேசியதை கண்டுகொள்ளாமல் திருமா அங்கிருந்து வெளியேறினார். இவரிடம் வாக்குவாதம் செய்யாமல் திருமா அங்கிருந்து வெளியேறினார். அதே சமயம் சில காங்கிரஸ் நிர்வாகிகள் படாபட் சீனிவாஸை ஏய் ஏய் என்ன பேசுற என்று விமர்சனம் செய்தனர். கடந்த மாதம் நிகழ்ந்த சம்பவம் இப்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.











Click it and Unblock the Notifications