நித்யானந்தாவுக்கு மேலும் சிக்கல்.. சொத்துப்பட்டியலை கேட்டு பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெங்களூரு: நித்யானந்தாவிற்கு ஜாமீன் அளித்தவர்கள், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் உள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் கர்நாடகா சிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சாமியார் நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நித்தியானந்தா மீது அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பல நிபந்தனைகளுக்கு பின்னரே நித்தியானந்தாவிற்கு ஜாமீன் வழங்கியது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
இந்நிலையில் சாமியார் நித்யானந்தா இந்தியாவைவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதால் அவரை கைது செய்ய போலீசாரால் இயலவில்லை.
இந்நிலையில் நித்யானந்தாவிற்கு எதிரான பாலியல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தாவிற்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களின் பட்டியலையும், 2 வாரங்களுக்குள் ஒப்படைக்குமாறு கர்நாடக மாநில சிஐடி போலீசாருக்கு ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் பல வாரங்களாக நேரில் ஆஜராகாத நித்யானந்தா மற்றும் அவர் தரப்பினருக்கு, இனியும் விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, தொடர்ந்து நித்யானந்தா மட்டுமின்றி, அவருக்கு ஜாமீன் மற்றும் அடைக்கலம் கொடுத்த அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று சிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார்












Click it and Unblock the Notifications