பெங்களூரில் உங்க மாநகராட்சி எது? மொத்தம் எத்தனை வார்டுகள்? 5 ஆக பிரிந்த BBMP.. முழு விவரம் இதோ
பெங்களூர்: பெங்களூரில் பிபிஎம்பி எனும் ஒரு மாநகராட்சி செயல்பட்டு வந்தது. இந்த மாநகராட்சி தற்போது 5 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சிகள் பெருநகர பெங்களூர் ஆணையத்தின் கீழ் செயல்பட உள்ளது. மாநகராட்சியில் வார்டு மறுவரை பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு மாநகராட்சியிலும் மொத்தம் எத்தனை வார்டுகள்? வார்டுகளின் பெயர்கள் என்னென்ன? என்பது பற்றிய முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் பிபிஎம்பி என்ற பெயரில் பெங்களூர் மாநகராட்சி செயல்பட்டு வந்தது. மொத்தம் 198 வார்டுகள் இருந்தன. பெங்களூரில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகளையும் உள்ளடக்கி இந்த ஒரு மாநகராட்சி மட்டுமே செயல்பட்டது.
இதனால் ஒவ்வொரு வார்டுகளிலும் ஏராளமான மக்கள் இருந்தன. இதனால் அவர்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து பெங்களூர் மாநகராட்சி 5 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி பிபிஎம்பி எனும் மாநகராட்சி கலைக்கப்பட்டு பெங்களூரு கிழக்கு, பெங்களூரு மேற்கு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு சென்ட்ரல் என்ற பெயரில் 5 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ன. இந்த மாநகராட்சிகள் பெருநகர பெங்களூர் ஆணையத்தின் கீழ் செயல்பட உள்ளது. இதையடுத்து வார்டு மறுவரையறை செய்யும் பணி தொடங்கி முடிவடைந்துள்ளது.
அதன்படி அதிகபட்சமாக பெங்களூர் மேற்கு மாநகராட்சியில் 111 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக பெங்களூர் வடக்கு மாநகராட்சியில் 72 வார்டுகளும், பெங்களூர் தெற்கு மாநகராட்சியில் 72 வார்டுகளும் உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களூர் சென்ட்ரல் மாநகராட்சியில் 63 வார்டுகள், பெங்களூர் கிழக்கு மாநகராட்சியில் 50 வார்டுகளும் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 368 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பெங்களூர் சென்ட்ரல், பெங்களூர் மேற்கு, பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு உள்ளிட்ட 4 மாநகராட்சிகளில் ஒரு வார்டுக்கு 40 ஆயிரம் மக்கள் இருப்பார்கள். பெங்களூர் கிழக்கு மாநகராட்சியில் 2 சட்டசபை தொகுதிகள் மட்டுமே வரும். அங்கு ஒரு வார்டுக்கு 26ஆயிரம் மக்கள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார்டுகளுக்கு மன்னர்கள், தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.
சட்டசபை தொகுதிகள் வாரியாக பார்த்தால் கேஆர் புரம், மகாதேவபுரா தொகுதிகளின் மக்கள் பெங்களூர் கிழக்கு மாநகராட்சியாக இருப்பார்கள். சிவி ராமன் நகர், சாந்தி நகர், சிவாஜி நகர், காந்தி நகர், சாம்ராஜ்பேட்டை, சிக்பேட்டை உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மக்கள் பெங்களூர் சென்ட்ரல் மாநகராட்சிக்குள் வருவார்கள்.
அதேவேளையில் மகாதேவபுரா, ஆனேக்கல், பொம்மனஹள்ளி, பிடிஎம் லே-அவுட், ஜெயநகர், பெங்களூர் தெற்கு, யஷ்வந்தராவின் ஒரு பகுதியினர், ராஜராேஸ்வரி நகர் உள்ளிட்ட பெங்களூர் தெற்கு மாநகராட்சிக்குள் வருவார்கள். தாசரஹள்ளி, எலஹங்கா, பேடராயனபுரா, ஹெப்பால், சர்வக்ஞ நகர், புலிகேசி நகர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளை சேர்ந்தவர்கள் பெங்களூர் வடக்கு மாநகராட்சியாக வருவார்கள்.
அதேவேளையில் பத்மநாபநகர் பசவனகுடி, விஜய் நகர், கோவிந்தராஜ் நகர், ராஜாஜி நகர், மல்லேஸ்வர், மகாலட்சுமி லே-அவுட், தாசரஹள்ளி, யஷ்வந்தபுரா தொகுதியின் ஒரு பகுதி, ராஜராஜேஸ்வரி, கோவிந்தராஜ் நகர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளை சேர்ந்தவர்கள் பெங்களூர் மேற்கு மாநகராட்சிக்குள் வருவார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் ஆட்சேபனையை தெரிவிக்கலாம். ஆட்சேபனை தெரிவிக்க அக்டோபர் 15ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகள் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அடுத்ததாக மாற்றங்கள் செய்யப்படும் என்று பெருநகர பெங்களூரு ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications