பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு வருது Work From Home.. போக்குவரத்து பிரச்சனையால் புது திட்டம்
பெங்களூர்: பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் திரும்பும் சாலைகளில் எல்லாம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்நிலையில் தான் பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில் ஐடி ஊழியர்களுக்கு ‛வொர்க் ப்ரம் ஹோம்' வழங்கும் அம்சம் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் முழு விவரம் வருமாறு:
நம் நாட்டின் ‛சிலிக்கான் வேலி' என்ற புனைப்பெயருடன் பெங்களூர் அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனம் இருப்பது தான் முக்கிய காரணமாகும். இதனால் பெங்களூர் நகரின் மக்கள்தொகையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

அதேபோல் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வதால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டிராபிக்கில் உலகளவில் 2ம் இடம்
உலகிலேயே அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரின் பட்டியலில் பெங்களூர் 2வது இடத்தில் உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகைள எடுத்து வருகிறது. ஆனாலும் பலன் இல்லை.
குறிப்பாக அவுட்டர் ரிங் ரோட்டில் போக்குவரத்து குறைந்தபாடில்லை. இந்நிலையில் தான் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெங்களூர் போலீசார் புதிய ரூல்ஸை கொண்டு வர உள்ளனர்.
டிராபிக்கை குறைக்க திட்டம்
இதற்கான பணியில் பெங்களூர் நகர போக்குவரத்து பிரிவின் இணை ஆணையரும், பெங்களூர் பெருநகர ஆணையத்தின் தலைமை ஆணையரும் சேர்ந்து திட்டத்தை வகுத்துள்ளனர். அதில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:
வொர்க் ப்ரம் ஹோம்
* 1,500 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
* ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வாரம் ஒருநாள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும்.
* வாரத்தில் ஒருநாள் கார் இல்லாத நாளை அமல்படுத்துவது. அந்த நாளில் பஸ் சேவைகளை பயன்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
40 சதவீதம் குறையும் போக்குவரத்து
பெங்களூர் நகரில் வாகனப் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்தால், போக்குவரத்து நெரிசலை 40 சதவீதம் குறைக்க முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். இதுதொடர்பாக பிப்ரவரி முதல் வாரத்தில் ஐடி நிறுவனங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் அனைவரும் ஓகே சொல்லும்பட்சத்தில் இந்த திட்டம் பெங்களூரில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தினமும் புதிதாக 3,000 வாகனங்கள்
இதுபற்றி பெங்களூர் நகர போக்குவரத்துத் துறை இணை ஆணையர் கார்த்திக் ரெட்டி அளித்த பேட்டியில், ‛‛பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தினமும் 2,500 முதல் 3,000 வாகனங்கள் சாலைகளில் புதிதாக வாங்கப்படுகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. குறிப்பாக அவுட்டர் ரிங் ரோட்டில் தான் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அதிகாரிகளுடன், காவல்துறை ஆணையரின் தலைமையில் ஒரு கூட்டத்தை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இந்தகூட்டத்துக்கு பிஎம்டிசி மற்றும் ஜிபிஏ போன்ற பிற துறையை சேர்ந்தவர்களும் அழைக்கப்படுவார்கள். சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications