Exclusive: கொடுமை.. திருச்சியிலிருந்து கடத்தி வரப்படும் ஆற்று மணல்.. பெங்களூரில் ஒரு லோடு ரூ.37,000
பெங்களூர்: திருச்சியிலிருந்து கடத்திவரப்படும் மணல்கள் பெங்களூரில் ஜரூராக விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூர் நகரம், கட்டுமான பணிகளில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் கர்நாடக காவிரி நதியோர பகுதிகளில் மணல் அள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே இங்கு திருச்சி, கரூர் பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் மணலுக்குதான் கடும் கிராக்கி.
தமிழகத்தில் கர்நாடகாவை போல ஆற்று மணல் அள்ள கடும் கட்டுப்பாடு இல்லை என்பதுதான் இதுபோன்ற மணல் கடத்தலை ஊக்குவிக்கிறதாம்.

அதிகாலை நுழைகின்றன
பெங்களூரில் திருச்சி மணல் என்ற பெயரில் நல்ல விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுகிறது. அதிகாலை 3 மணிக்கெல்லாம் நகருக்குள் லாரிகள் வருமளவிற்கு திட்டமிட்டு மணல் கொண்டுவரப்படுகிறதாம். ஆற்று நீர் சாலைகளில் வழிந்தோட மணல்கள் லாரி, லாரியாக திருச்சியிலிருந்தும், கரூரிலிருந்தும் பெங்களூருக்கு கொண்டு வரப்படுகின்றன.

எங்கெல்லாம் விற்பனை
பெங்களூரிலுள்ள சில்க்போர்ட் சந்திப்பு பாலத்தின் கீழேயும், ஹெப்பால் மேம்பாலம் அருகேயும் சட்ட விரோதமாக லாரிகளை நிறுத்தி மணல் விற்பனை செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. இதன் அடுத்தகட்டமாக பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்து, மணல் விற்பனை ஆரம்பித்துள்ளது. திருச்சி ஆற்று மணல் விற்பனைக்கு கிடைக்கும் என்ற பெயரில், பெங்களூரை சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் பகிரங்கமாக பதிவு போட்டுள்ளதை நீங்களே பாருங்கள். இது தொடர்பாக 'ஒன்இந்தியா' அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியது.

சட்ட விரோதம்
எந்த இடத்திற்கு வந்தால் மணல் கிடைக்கும் என்ற கேள்விக்கு எதிர்முனையில் சரியான பதில் இல்லை. உங்கள் கட்டுமான பணி எங்கு நடக்கிறது என்று சொல்லுங்கள், அதன் அருகே நாங்கள் எங்காவது லாரியில் மணல் வைத்திருப்போம். அங்கே வந்து வாங்கிச் செல்லுங்கள் என்பதே பதிலாக கிடைத்தது.
ஒருநாளைக்கு முன்னால் சொன்னால் அடுத்த நாள் தருவோம் என்றும் அவர் கூறினார். அப்படியானால் நீங்கள் உரிய உரிமம் பெற்று, கடை திறந்து மணல் விற்பனை செய்யவில்லையா என்ற கேள்விக்கு, அதெல்லாம் உங்களுக்கு ஏன், மணல் தேவையென்றால் வாங்குங்கள் என்று கடுகடுத்த குரலில் பதில் கிடைத்தது.

37 ஆயிரம் ரூபாய்
இன்றைய நிலவரப்படி, திருச்சி மணல் ஒரு லோடு பெங்களூரில் ரூ.37,000 என்று அவரே நம்மிடம் தெரிவித்தார். கர்நாடகாவில் ஓடும் காவிரிதான், பல மைல்கள் கடந்து திருச்சியை தாண்டுகிறது. ஆனால், மணல் மட்டும் திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்டு கர்நாடகாவிற்கே கொண்டு வரப்படுகிறது என்பதை இந்த சம்பவங்கள் உறுதி செய்கிறது. ஆற்றையும், சுற்றுச்சூழலையும், கர்நாடகா பாதுகாப்பதற்கும், தமிழகம் இதை கையாளுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.












Click it and Unblock the Notifications