பெங்களூர் கனமழை.. சீட்டு கட்டுபோல் சரிந்த கட்டிடம்! 8 பேர் பலியான சோகம்.. இருவர் தமிழர்கள் என தகவல்!
பெங்களூர்: பெங்களூரில் கனமழை காரணமாக ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த எட்டு பேரில் 2 பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகியோர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது போல் தற்போது கர்நாடகாவின் பெங்களூருவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மழையோடு ஒப்பிட்டால் பெங்களூருவில் மழை பெரிய அளவில் இல்லை என்று கூறலாம்.

அதே நேரத்தில் ஏரி மற்றும் ஏரி மீது வீட்டுமனைகள் அமைத்த பகுதிகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. பெங்களூருவில் நேற்று முன்தினம் சௌடேஸ்வரி வார்டு, எலக்கங்கா, வித்யாரண்யபுரா போன்ற பகுதிகளை அதிக மழை பெய்தது.
இந்நிலையில் பெங்களூரு பாபுசாபாளையத்தில் ஆறு மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டுமான பணியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக நேற்று மாலை திடீரென அந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்த கட்டிடத்தின் காரணமாக அந்த பகுதியில் இடி போன்ற சத்தம் கேட்டது. கட்டிட பணியில் ஏராளமானோர் ஈடுபட்ட வந்த நிலையில், இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர்.
இதனையடுத்து அந்த கட்டிடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கட்டிட விபத்தில் சிக்கி அவர்கள் 21 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் எட்டு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பலத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காண்பதற்காக விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கட்டிட இருபாடுகளில் மேலும் பல சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூரு கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் தமிழர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 6 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த மணிகண்டன் சத்யராஜ் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்களது உடல்கள் சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உயர்ந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பாணியில் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரும் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கட்டிட விபத்து தொடர்பாக கட்டடத்தில் உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications