பெங்களூரில் உதயநிதி ஸ்டாலின்! புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல்! குடும்ப நட்பு என உருக்கம்
பெங்களூர்: மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு திமுக எம்எல்ஏ மற்றும் திமுக இளைஞரணி செயலாளரான, உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக வளர்ந்து வந்த புனித் ராஜ்குமார் கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முழு அரசு மரியாதையுடன் கர்நாடக அரசு இந்த நல்லடக்கத்தை நடத்தியது.

புனித் ராஜ்குமார்
முன்னதாக, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், ரசிகர்களும் , புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இருப்பினும் தமிழ் திரையுலகத்தில் இருந்து முன்னணி நடிகர் நடிகைகள் யாரும் பெங்களூர் சென்று புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. இதனால் கன்னட சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தமிழ் நடிகர்களை விமர்சனம் செய்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

சிவ கார்த்திகேயன்
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக தமிழ் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் புனித் ராஜ்குமாருக்கு, அஞ்சலி செலுத்துவதற்காக பெங்களூர் சென்றார். புனித் ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று புனித் ராஜ்குமாரின் மூத்த சகோதரர் சிவராஜ்குமாரை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
Recommended Video

பெங்களூரில் புனித் ராஜ்குமார்
இந்த நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் பெங்களூரிலுள்ள புனித் ராஜ்குமார் நினைவிடத்துக்கு நேரில் சென்று அங்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராஜ்குமார் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்.

ராஜ்குமார் குடும்பத்தோடு நட்பு
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், புனித் ராஜ்குமார் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியவர் ராஜ்குமார் உயிரோடு இருந்தபோது எனது தாத்தா கருணாநிதியிடம் மிகுந்த நட்பு பாராட்டினார். எனது தாத்தாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். என்னுடைய தந்தையார் மட்டுமல்லாது என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தாருக்கும் மிகவும் நெருக்கமான குடும்பமாக இருந்தார்கள்.

முதல்வர் மற்றும் திமுக சார்பில்
இந்த நேரத்தில் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்து தலைவர் சார்பாகவும் எங்களுடைய குடும்பத்தின் சார்பாகவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications