ஆபாச வீடியோ! மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா? உடுப்பி கல்லூரியில் குஷ்பு ஆய்வு! பரபர தகவல்
பெங்களூர்: உடுப்பியில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியில் கழிவறையில் ரகசியமாக கேமரா வைத்து சகமாணவிகளை ஆபாசமாக 3 மாணவிகள் வீடியோ எடுத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு ஆய்வு மேற்கொண்டு முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே அம்பலபாடி என்ற இடம் உள்ளது. இங்குள்ள தனியார் பாரா மெடிக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கர்நாடகா மட்டுமின்றி கேரளாவில் இருந்து மாணவிகளும் படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த கல்லூரி பரபரப்பான குற்றச்சாட்டுக்கு உள்ளானது. அதாவது கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச வீடியோ எடுக்கப்பட்டதாக வெளியான தகவல் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதாவது கல்லூரியில் படிக்கும் 3 மாணவிகள் கழிவறையில் யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமரா பொருத்தியதாகவும், அதன்மூலம் மாணவி ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோ கல்லூரி ஆண் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இதுகுறித்த புகாரில் கல்லூரி நிர்வாகம் 3 மாணவிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. மேலும் புகாரின் அடிப்படையில் மல்பே போலீசாரும் 3 மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தான் உடுப்பி கல்லூரி சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜகவினர் பல இடங்களில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் இருப்பதாக கூறி பாஜகவினர் போராட்டத்தை தொடங்கினர்.
இதனால் உடுப்பி கல்லூரி விவகாரம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் சம்பவம் குறித்து விசாரிக்க நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ள குஷ்பு உடுப்பிக்கு சென்றார். அங்கு அவர்கள் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து முக்கிய விபரங்களை பெற்றார்.
அதன்பிறகு நேற்று பாரா மெடிக்கல் கல்லூரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். கழிவறையில் கேமரா வைக்க முடியுமா? இல்லையா? என்பது பற்றி ஆய்வு செய்தார். மேலும் கல்லூரி நிர்வாகத்திடம் அவர் விசாரித்தார். பின்னர் குஷ்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛நான் யாரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் இங்கு வரவில்லை. தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் வந்ததால் விசாரணை மேற்கொண்டேன். இந்த வழக்கில் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். போலி வீடியோ, தகவல்களுக்கு இடமளிக்க கூடாது. போலீஸ் விசாரணையில் கழிவறையில் ரகசிய கேமரா மற்றும் செல்போன் கேமரா வைக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
கேமரா பொருத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் வதந்தி பரவி வருகிறது, தவறான வீடியோக்கள் சுற்றி வருகின்றன. வீடியோ தொடர்பாக தடயவியல் துறை ஆய்வின் அறிக்கைக்காக தேசிய மகளிர் ஆணையம் காத்துள்ளது. இதனால் தற்போது வரை வழக்கில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அறிக்கை, விசாரணை முடிந்த பிறகு தான் இந்த வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் இறுதி முடிவுக்கு வரும். அதுவரை வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications