உ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது
பெங்களூரு: உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமாஜ் இயக்கத்தின் தலைவராக இருந்த கமலேஷ் திவாரி கடந்த வெள்ளிக்கிழமையன்று லக்னோவில் கத்தியால் குத்தப்பட்டும் துப்பாகியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டார். போலி சமூக வலைதள அக்கவுண்ட் மூலம் கமலேஷ் திவாரியுடன் சிலர் பழகி இருக்கின்றனர்.
பின்னர் கமலேஷ் திவாரியை நேரில் சந்தித்து தீபாவளி இனிப்புகள் வழங்குவது போல் நடித்து இக்கொலையை செய்துள்ளனர். 2015-ம் ஆண்டு இஸ்லாம் மதம் தொடர்பான கமலேஷ் திவாரியின் கருத்துகளுக்கு பழிவாங்கும் வகையில் இக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

சூரத் ஸ்வீட் பாக்ஸ்
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த ஸ்வீட் பாக்ஸ் குஜராத்தின் சூரத்தில் வாங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் குஜராத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சூரத்தில் 3 பேர் கைது
இதனையடுத்தே இப்படுகொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் கைது செய்யப்பட்டு உத்தரப்பிரதேச போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.. மற்றொரு நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடைகள், ஆயுதங்கள்
அத்துடன் கொலையாளிகள் லக்னோவில் தங்கியிருந்த ஹோட்டலில் ரத்த கறை படிந்த உடைகள், ஆயுதங்களை விட்டுச் சென்றுள்ளனர். இவற்றையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் பிரமுகருக்கு தொடர்பு?
இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கமலேஷ் திவாரியின் குடும்பத்தினர் உள்ளூர் பிரமுகர்கள் மட்டும்தான் இக்கொலைக்கு காரணம்; இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சிதான் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

முதல்வருடன் சந்திப்பு
இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கமலேஷ் திவாரி குடும்பத்தினர் சந்தித்து பேசினர். இந்நிலையில் கமலேஷ் திவாரி படுகொலை வழக்கில் தொடர்புடைய நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவில் சிமி தீவிரவாதி
கர்நாடகாவின் ஹூப்பாளி பகுதியைச் சேர்ந்த முகமது ஜபார் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர் என கூறப்படுகிறது.

கொலையாளிகளுடன் தொடர்பு?
இருப்பினும் இப்படுகொலையில் இவருக்கான தொடர்பு குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. அதேநேரத்தில் கமலேஷ் திவாரி கொலையாளிகளின் போலி சமூக வலைதள அக்கவுண்ட்டில் இவரும் நண்பராக இருந்தார் என்பதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளாராம்.












Click it and Unblock the Notifications