பெண்ணை நிர்வாணப்படுத்தி முகத்தில் சிறுநீர் கழித்து பாலியல் கொடுமை.. பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு!
பெங்களூர்: கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ முனிரத்னா மீது பாஜகவை சேர்ந்த பெண் ஒருவரே பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜகவை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ முனிரத்னா மீது புகார் அளித்துள்ளார். பாஜக பெண் தொண்டரை, முனிரத்னா தனது உதவியாளர்களை விட்டு கும்பல் பலாத்காரம் செய்ய வைத்ததாகவும், அந்த பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும், அதன் பிறகு கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாகவும் சம்பந்தப்பட்ட பெண் குற்றம்சாட்டி உள்ளார்.
அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், "என் மீது பொய்யாக சுமத்தப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக கூறி சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா அவரது அலுவலகத்திற்கு என்னை அழைத்திருந்தார். அவரை நம்பி நான் அவரது அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். அப்பேது அங்கு இருந்த முனிரத்னாவும் மற்ற இரண்டு நபர்களும் திடீரென எனது ஆடைகளை கிழித்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அப்போது முனிரத்தனா எனது முகத்தில் சிறுநீர் கழித்து கொடூரமான முறையில் நடந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் என் மீது ஏதோ ஒரு ஊசியை செலுத்தினார்கள். பிறகு இது பற்றி வெளியே சொன்னால் உனது மகனை கொலை செய்து விடுவோம் என மிரட்டினார்கள். இதனைத் தொடர்ந்து எனது உடல்நிலை கடுமையாக பாதிக்ககப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
அப்போது மருத்துவர்கள் குணப்படுத்த முடியாத வைரஸ் தொற்று உடலில் பரவி இருப்பதாக கூறினார்கள். பிறகு நான் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டேன். என்னைச் சீரழித்த முனிரத்னா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என காவல் நிலையத்தை நம்பி வந்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து பாஜக எம்.எல்.ஏ முனிரத்னா மீது போலிசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 டி (கும்பல் பலாத்காரம்), 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றைப் பரப்பும் தீங்கிழைக்கும் செயல்), 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 354 (ஒரு பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம்), 504 (அவமதித்தல்), 506 (குற்றவியல் மிரட்டல்), 509 (ஒரு பெண்ணை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்) மற்றும் 34 ஆகிய பிரிவுகளில் )வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனிரத்னா மீது ஏற்கனவே பல பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications