உதவாக்கரைகளே.. வாயை மூடிட்டு இருங்க.. காங்கிரஸ் தொண்டர்களை மேடையிலேயே திட்டி தீர்த்த கார்கே
பெங்களூர்: கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது தொண்டர்கள் 'டிகே.. டிகே..' என்று டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதனால் கோபமான மல்லிகார்ஜுன கார்கே உதவாக்கரைகளா என்று திட்டி கோபத்தை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகா காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் டிகே சிவக்குமார் இருந்தார். இந்நிலையில் தான் முதல்வராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து டிகே சிவக்குமார் கர்நாடகாவின் முதல்வரானர்.

முதல்வரானதால் டிகே சிவக்குமாரிடம் இருந்த காங்கிரஸ் தலைவர் பதவி ஹரிபிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தான் கர்நாடகா காங்கிரஸ் தலைவராக இன்று ஹரிபிரசாரத் பொறுப்பேற்றார்.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, முதல்வர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மூத்த காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்களில் ஒரு தரப்பினர், ''டிகே.. டிகே.. டிகே..'' என்று கோஷமிட்டனர். கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக இந்த கோஷத்தை எழுப்பினர். இதனால் கோபமான மல்லிகார்ஜுன கார்கே மேடையிலேயே நின்றபடி, ''இப்படி கோஷமிடுவதால் இந்த நாடே உங்களின் கைக்கு வந்துவிட்டதாக ஆகிவிடுமா? (Useless Fellows) உதவாக்கரைகளா..
இது காங்கிரஸ் கட்சியின் மீட்டிங். இதில் யாராவது ஒருநபர் சார்ந்த மீட்டிங் கிடையாது. எல்லோரும் சேர்ந்து கட்சியை பலப்படுத்துவதற்கான நிகழ்ச்சி இது. இங்கு வந்து ஒருவர் இன்னொருவரின் பெயரை சொல்லி கோஷமிடுவது. இன்னொருவர் மற்றொருவரின் பெயரை சொல்லி கோஷமிடுவது என்றால் மற்றவர்கள் எல்லாம் குப்பை கூட்ட இங்கு வந்தார்களா?'' என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.













Click it and Unblock the Notifications