அம்மாவுக்கு கர்நாடகா அரசு மரியாதை! என்ன சொல்றதுனே தெரில! கண் கலங்கிய சரோஜாதேவி மகன்
பெங்களூர்: மறைந்த சரோஜாதேவியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அவரது உடல் கர்நாடக அரசின் முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மிகவும் கண் கலங்கியபடியே அவருடைய மகன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள வீட்டில் சரோஜாதேவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது மறைவுச் செய்தி அறிந்த நடிகர், நடிகைகள், திரை, அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சரோஜாதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வாள் போன்ற கண்ணழகி என அனைவராலும் வர்ணிக்கப்பட்ட சரோஜாதேவி, தன் இறப்புக்கு பின்னர் கண்களை தானமாக வழங்கவும் விரும்பினார். அதன்படி பெங்களூர் நாராயணா நேத்ராலயா மருத்துவமனைக்கு சரோஜாதேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
சரோஜாதேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அது போல் தமிழ் திரையுலகில் நடிகர்கள் அர்ஜுன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களை நடிகர் கார்த்தி பேசுகையில், நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்தாலும் இப்போது அவர்கள் இல்லாததால் எங்களால் முழு சந்தோஷம் அடையவே முடியாது. சரோஜாதேவி அம்மாவை மிகவும் மிஸ் செய்வோம் என வருத்தத்துடன் கூறினார்.
அது போல் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோரும் சரோஜாதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். நடிகர் சத்யராஜும் ஒரு வீடியோ வெளியிட்டு அதில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சரோஜாதேவியின் உடல் தெற்கு பெங்களூர் ராம்நகராவில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. கர்நாடக அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சரோஜாதேவியின் மகன் கூறுகையில், அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் நன்றி.
அம்மாவுக்கு அரசு மரியாதை செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வருவதாக சொல்லியிருக்கிறார். அதுகுறித்து உறுதியாக தெரியவில்லை. கார்த்தி, விஷால் உள்ளிட்டோரும் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். எங்களை போன்றே அவர்களும் அம்மாவின் இறப்பால் மிகவும் கலங்கி போயிருக்கிறார்கள். இவ்வாறு கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி மகன் தெரிவித்தார்.
சரோஜாதேவி வயோதிகம் காரணமாக நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 87. அவருடைய இறப்புக்கு பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications