கார் திருட யூடியூப் பயன்படுத்திய கொள்ளையர்கள்.. அதிர வைக்கும் பெங்களூர் சம்பவம்
பெங்களூர்: யூடியூப் வீடியோக்களை நாம் பொதுவாக எதற்கு பார்ப்போம்? பிடித்த திரைப்படங்கள் அல்லது பாடல்கள், அல்லது நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரசிப்பதற்காக அல்லவா! இன்னும் சிலர் சினிமா விமர்சனங்களுக்கும், இன்னும் பலர் ஜோதிட கணிப்பு உள்ளிட்டவற்றை, அறிந்து கொள்ளவும் யூடிப்பை பயன்படுத்துவார்கள்.
ஆனால் வீட்டின் பக்கத்தில் நிறுத்தி வைக்கப்படும் கார்களை திருடுவதற்கு யூடியூப்பை ஒரு கொள்ளை கும்பல் பயன்படுத்தியுள்ளனர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இப்படி ஒரு சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரத்தை தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று சொல்வார்கள். ஐடி நிறுவனங்கள் குவிந்து இருப்பதால் இதற்கு இந்தப் பெயர். ஆனால், திருடுவதற்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த நகரின் பெயருக்கு வேறு அர்த்தத்தை கற்பித்து விட்டது ஒரு கொள்ளை கும்பல்.
இதுதான் விஷயம்: கர்நாடக மாநிலம் மங்களூர் நகரை சேர்ந்தவர் அலி அகமது (39). இவர் அங்கு கார் கேரேஜ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கேரள மாநிலம் கொல்லம் நகரை சேர்ந்த திலீஸ் (38), ஷாஜி (47), ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த மூவரும் யூடியூப் இணையதளத்தில், கார் கதவுகளை, சிப் மூலமாக கள்ளத்தனமாக திறப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்டு, அதை பெங்களூரில் செயல்படுத்தி காட்டியுள்ளனர்.
நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரின் கதவுகளை இவர்கள் தங்கள் சிப்புகள் மூலமாக திறந்து அவற்றை மங்களூர் ஓட்டிச் சென்று விடுவார்கள். இவ்வாறு செல்லும் போது எந்த ஒரு டோல்கேட் சாலையும் இவர்கள் பயன்படுத்துவது கிடையாது. ஏனெனில் டோல்கேட்டில் சிசிடிவிகள் இருக்கும். இந்த காட்சிகளை வைத்து போலீசார் எப்படியாவது கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், டோல் இல்லாத சாலைகள் வழியாக வளைந்து நெளிந்தும் மங்களூர் சென்று விடுவார்களாம்.
மங்களூரில் போலி ஆவணங்கள் மூலம் இந்த கார்களை விற்பனை செய்து வந்துள்ளனர். சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது காரை காணவில்லை என்று அளித்த புகாரை விசாரித்த போது, அந்த ஏரியாவில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு இந்தக் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 9 கார்கள் மீட்கப்பட்டுள்ளன.
நாட்டில் எத்தனையோபேர், தொழிநுட்பத்தை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி சமூகத்துக்கும் நல்ல பங்களிப்பை அளிக்கிறார்கள். ஆனால் இப்படியும் சிலர் தங்களையும் கெடுத்து, நாட்டையும் கெடுத்து வருகின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயம்.












Click it and Unblock the Notifications