ஒரு வாரம் ஆகிடுச்சு..இன்னும் பயன்பாட்டிற்கு வராத.. கர்நாடக முதல்வரின் ஆக்சிஜன் பஸ்..மக்கள் அதிருப்தி
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் அறிவித்த ஆக்சிஜன் பஸ் ஒரு வாரம் ஆகியும் பயன்பாட்டுக்கு வராதது பெங்களூருவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா 2ஆம் அலை தற்போது மெல்லக் குறைந்து வருகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள.. பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சிறை விடுப்பு
அதேநேரம் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது தான் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கர்நாடகாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகும்கூட வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.
கர்நாடகா கொரோனா பாதிப்பு
பெங்களூருவில் பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக புதிய கொரோனா நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல அங்கு கொரோனா நோயாளிகளுத்து தேவைப்படும் ஆக்சிஜனும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆக்சிபஸ்
இந்நிலையில், நிலைமையைச் சமாளிக்கக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மே 11ஆம் தேதி ஆக்சிஜன் பேருந்துகளை அறிமுகம் செய்தார். இந்த பேருந்துகளின் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு ஆக்சிஜன் உதவியை அளிக்க முடியும் மொத்தம். இதுபோல 20 பேருந்துகளைப் பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர்ப் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் என எடியூரப்பா அறிவித்திருந்தார். இந்த பேருந்துகள் மருத்துவமனைகளின் அருகே நிறுத்தப்படும் என்றும் ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகள் இதன் மூலம் பயன் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
பயன்பாட்டிற்கு வரவில்லை
இருப்பினும், ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும், இன்னும் இந்த ஆக்சிஜன் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவில்லை. பெங்களூருவில் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் அறிவித்த திட்டமே ஒரு வாரம் கடந்தும் செயல்பாட்டு வராமல் இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒரு பேருந்து மட்டுமே தயார் நிலையில் உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் மற்றொரு பேருந்து தயாராகிவிடும் என்றும் பெங்களூரு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்ன காரணம்
இது குறித்து பெங்களூரு நகராட்சி அதிகாரிகள் மேலும் கூறுகையில், "முதல்கட்டமாக 2 ஆக்சிஜன் பேருந்துகள் இன்னும் இரண்டு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும். மீதமுள்ள 18 பேருந்துகளும் விரைவில் தயாராகிவிடும். இருந்தாலும், எப்போது தயார் ஆகும் என உறுதியாக எங்களால் கூற முடியாது. தற்போதுள்ள சூழ்நிலையில், ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதால், இதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விரைவில் பயன்பாட்டுக்கு வரும்
20 பேருந்துகளுக்கு மொத்தம் 160 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவை. இவற்றைத் தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். ஆக்சிஜன் பேருந்துகள் தயார் ஆனதும், அவை ஒவ்வொன்றாக மெல்ல மக்கள் பயன்பாட்டிற்கு வரும்" என்றார். இது தவிர கர்நாடக போக்குவரத்துத் துறை சார்பில் ஆக்சிஜன் ஆன் வீல் என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் தற்போது 6 பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.